கேரள மாநிலம் கண்ணூர் அருகே குட்டியாட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரஜித் (32). இவரது மனைவி ரீஷா (26). நிறைமாத கர்ப்பிணியான ரீஷாவுக்கு இன்று காலை பிரசவ வலி ஏற்பட்டதால் குடும்பத்தினர் அவரை கண்ணூர் மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடிவு செய்தனர். அதன் படி, ரீஷா உள்பட 6 பேர் காரில் புறப்பட்டனர்.
அப்போது கார் கண்ணூர் மாவட்ட மருத்துவமனை அருகே சென்ற போது திடீரென தீ பிடித்து எரிய தொடங்கியது. இதில் காரின் முன் பகுதி முற்றிலும் தீ பரவியதால் ரீஷா மற்றும் அவரது கணவர் பிரஜித் இருவராலும் தப்பிக்க முடியவில்லை. அதேபோல் பின் பிக்கம் அமர்ந்திருந்த ரீஷாவின் உறவினர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
இதையடுத்து அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயணைத்து காரின் முன் பக்கத்தில் இருந்த ரீஷா மற்றும் அவரது கணவரை சடலமாக மீட்டனர்.
விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட கண்ணூர் நகர போலீஸ் கமிஷனர் அஜித் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், “காரின் பின் இருக்கையில் இருந்தவர்களுக்கு காயம் எதுவும் இல்லை. அவர்கள் மருத்துவமனையில் உள்ளனர், அவர்கள் பரிசோதிக்கப்படுகிறார்கள். தீப்பிடித்த காரின் முன்பக்க கதவை திறக்க முடியாததால், ரீஷாவும், பிரஜித்தும் உள்ளே சிக்கிக்கொண்டதாக தெரிகிறது என்றார்.
இந்த விபத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில், “காரின் முன் பக்கம் உடனடியாக தீப்பிடித்ததால் நாங்கள் முற்றிலும் உதவியற்ற நிலையில் இருந்தோம். காரின் எண்ணெய் டாங்க் எந்த நேரத்திலும் வெடித்துவிடுமோ என்ற அச்சத்தில் அவர்களைக் காப்பாற்ற எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை” என்று கூறினார்.