குவாஹாட்டி: அசாமின் குவாஹாட்டியில் ஜி20 அமைப்பின் 2 நாள் மாநாடு நேற்று தொடங்கியது.
ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பை கடந்த டிசம்பர் 1-ம் தேதி இந்தியா ஏற்றது. இதன்படி ஓராண்டுக்கு நாடு முழுவதும் ஜி20 தொடர்பான மாநாடுகள் நடத்தப்பட உள்ளன. வரும் செப்டம்பரில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது.
இந்த சூழலில் அசாமின் குவாஹாட்டி நகரில் ஜி20 அமைப்பின் 2 நாள் மாநாட்டை மத்திய அமைச்சர் சர்வானந்த சோனோவால் நேற்று தொடங்கி வைத்தார். இதில் ஜி20 அமைப்பை சேர்ந்த 95 வெளிநாட்டு பிரதிநிதிகள் உட்பட 100 பேர் பங்கேற்றுள்ளனர்.
மாநாட்டில் அமைச்சர் சர்வானந்த சோனோவால் பேசியதாவது:
கரோனா பெருந்தொற்றால் உலக நாடுகள் இன்னமும் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. இந்த நேரத்தில் ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றிருக்கிறது. ஐ.நா. சபையின்வறுமை ஒழிப்பு, பருவநிலை மாறுபாட்டை தடுப்பது உள்ளிட்ட இலக்குகளை எட்ட ஜி20 தொடர்ந்து பாடுபடும்.
சர்வதேச பொருளாதாரத்தில் நீடிக்கும் மந்த நிலையை மாற்றி வளர்ச்சிப் பாதைக்கு திரும்ப ஜி20 அமைப்பு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்கும். இந்தியாவின் தலைமையில் புதிய விடியல் பிறக்கும். இதற்கு அனைத்து நாடுகளும் உறுதுணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் சர்வானந்த சோனோவால் பேசினார்.