கடந்த 1992 ஆம் ஆண்டு வாச்சாத்தி கிராமப் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில், திடீர் திருப்பமாக உயர்மன்ற நீதிபதி வேல்முருகன், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து கள ஆய்வு நடத்தியுள்ளார்.
தர்மபுரி: வீரப்பன் நடமாடியதாக சொல்லப்பட்ட தருமபுரி மாவட்டத்துக்கு உட்பட்ட வாச்சாத்தி கிராமத்தை சேர்ந்தவர்கள் சந்தன மரத்தை வெட்டி கடத்தி செல்வதாக குற்றஞ்சாட்டி, வனத்துறை மற்றும் தமிழக காவல்துறை, வருவாய்த்துறையினர் அந்த கிராமத்தில் விசாரணைக்கு சென்றனர்.
1992 ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்தில் 18 பெண்களை தமிழக அரசு அதிகாரிகள், காவல்துறையினர், வனத்துறை அதிகாரிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அடித்து துன்புறுத்தியதாகவும், குடிசைகளை அடித்து நொறுக்கி, பொருட்களை சேதப்படுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் புகார் அளித்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டத்தில், வனத்துறை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், தமிழக அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 296 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.
இந்த 296 பேர்களில் 54 பேர் உயிரிழந்துவிட்டனர். மீதமுள்ளவர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரணை செய்து வரும் உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் அவர்கள், அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டிருந்த பின்னர், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.
இந்நிலையில், வாச்சாத்தி மலை கிராமத்திற்கு நேரடியாக சென்ற நீதிபதி வேல்முருகன் அவர்கள், பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்தித்து கள ஆய்வு நடத்தியுள்ளார்.