சத்தியமங்கலம் அருகே சாலையோரத்தில் சிறுத்தை நடமாட்டம்

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இந்த மலை கிராமங்களை சேர்ந்த மக்கள் கடம்பூர் மலை பாதை வழியாக சத்தியமங்கலத்திற்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலை சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் செல்வதற்காக சரக்கு வேனில் கடம்பூர் மலை பகுதியைச் சேர்ந்த இருவர் சென்று கொண்டிருந்தனர்.

கடம்பூர் செல்லும் மலைப்பாதையில் மல்லியம்மன் கோவில் அருகே சென்றபோது சாலையோரத்தில் சிறுத்தை நடமாடுவதை வாகனத்தில் சென்றவர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்து வாகனத்தை நிறுத்தினர். அப்போது வாகனத்தின் முகப்பு விளக்கு வெளிச்சத்தைக் கண்ட சிறுத்தை மெதுவாக சாலையை கடந்து சென்றது. சிறுத்தை நடமாட்டத்தை சரக்கு வேனில் சென்றவர்கள் தங்களது செல்போன்களில் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்தனர். தற்போது சிறுத்தையின் புகைப்படம் மற்றும் வீடியோ வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.