டெல்லியில் சர்வதேச சிறுதானியங்கள் மாநாடு; அஞ்சல் தலை, நாணயம் வெளியிட்டு பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி,

டெல்லியில் பூசா நகரில் சர்வதேச சிறுதானியங்கள் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று கலந்து கொண்டு, அதனை தொடங்கி வைத்து உள்ளார். இந்த நிகழ்ச்சியில் அஞ்சல் தலை ஒன்றையும், சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு 2023-ற்கான அதிகாரப்பூர்வ நாணயம் ஒன்றையும் பிரதமர் மோடி வெளியிட்டார்.

இதன்பின்னர் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் பேசும்போது, சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டில் இந்தியா முன்னிலை வகிப்பதில் நான் பெருமை கொள்கிறேன்.

சர்வதேச சிறுதானியங்கள் மாநாடு போன்ற நிகழ்வுகள், சர்வதேச நலன்களுக்கு தேவையானது மட்டுமின்றி உலகளாவிய நன்மைக்கான இந்தியாவின் அதிகரித்து வரும் பொறுப்புணர்வுக்கான அடையாளமும் ஆகும் என கூறினார்.

இந்தியாவின் முன்மொழிவுகள் மற்றும் முயற்சிகளுக்கு பின்னர், 2023-ம் ஆண்டை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக ஐ.நா. அமைப்பு அறிவித்து இருப்பது என்பது நமக்கு கிடைத்த மிக பெரிய கவுரவத்திற்கு உரிய விசயம்.

இந்த நிகழ்ச்சியின் இன்று நாட்டின் 75 லட்சத்திற்கும் கூடுதலான விவசாயிகள் காணொலி வழியே கலந்து கொண்டுள்ளனர் எனும்போது, அதன் முக்கியத்துவம் என்ன என்பது வெளிப்படுகிறது என்று பிரதமர் மோடி பேசி உள்ளார்.

இந்தியாவின் சிறுதானிய இயக்கம், 2.5 கோடி விளிம்பு நிலையிலான விவசாயிகளுக்கு கிடைத்த ஆசீர்வாதங்களாக அமையும். இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் சிறுதானிய விவசாயிகளுக்கு முதன்முறையாக அரசு கவனம் செலுத்தி வருகிறது என்றும் அவர் பேசியுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.