கர்நாடகாவில் தேர்தல் பேரணியில் பணத்தை அள்ளி வீசிய காங். தலைவர் – வைரலாகும் வீடியோ

கர்நாடகாவில் தேர்தல் பேரணியின்போது காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், மக்களிடம் பணத்தை அள்ளி வீசியதாக வீடியா காட்சி வெளியாகி உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டுள்ள நிலையில், அம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரமும் சூடுபிடித்துள்ளது. ஆளும் பா.ஜ.க. ஆட்சியை தக் வைக்க வியூகங்களை வகுத்து செயல்பட்டு வருகிறது. காங்கிரஸோ, ஆட்சி அமைப்பதற்கான அஸ்திவாரங்களை எடுத்து வருகிறது. இதனால் கர்நாடக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக, காங்கிரஸ் தீவிரமாய்ச் செயலாற்றி வருகிறது. அக்கட்சியின் தலைவர் டி.கே.சிவக்குமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
image
இதன் ஒருபகுதியாக, மாண்டியாவில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது, திரண்டிருந்த மக்கள் மீது, டி.கே.சிவக்குமார் பணத்தை அள்ளி வீசியிருக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியினரின் கோட்டையாக மாண்டியா விளங்குகிறது. இங்கு, கர்நாடகாவில் பெரும்பான்மையான சமூகத்தைச் சேர்ந்த ஒக்கலிகா கவுடா வாக்கு வங்கி முதன்மையானதாக இருக்கிறது. கடந்த காலங்களில் ஜேடிஎஸ்-க்கு பக்கபலமாக இருந்த ஒக்கலிகா கவுடா வாக்கு வங்கி இம்முறை முழுமையாக காங்கிரஸ் பின்னால் இருக்கிறது.
அதே சமூகத்தைச் சேர்ந்த டி.கே.சிவகுமார், அம்மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருப்பதும் இதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. இதனால், ஒட்டுமொத்த வாக்கையும் அறுவடை செய்யும் நோக்கில் டி.கே.சிவக்குமார் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனாலேயே தனது கையை வலுப்படுத்தும் விதமாக தேர்தல் பேரணிக்கு அச்சமூக மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்ததாகவும், அப்போதுதான் பணத்தை வாரி வீசியதாகவும் கூறப்படுகிறது.
டி.கே.சிவக்குமார் பணத்தை அள்ளி வீசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து செய்தியையும் வீடியோவையும் நியூஸ் ஃபர்ஸ்ட் கன்னடா (NewsFirst Kannada) சேனல் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவை பார்க்க இங்கு க்ளிக் செய்யவும். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.