கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தம்மத்துக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சனித்-லாவண்யா தம்பதியினர். இவர்கள் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளனர். அந்த புகாரில், “குமரி மாவட்டத்தில் சுங்கான் கடை பகுதியில் சுரேஷ்குமார், அசோக்குமார் என்ற இருவர் பூஜை செய்வதோடு, அருள்வாக்கும் சொல்லி வருகின்றனர்.
அந்த இடத்திற்கு நாங்கள் அருள்வாக்குக் கேட்க சென்றோம். அப்போது, அவர்கள் உங்களுக்கு தெய்வீக சக்தி உள்ளது. அதனால், நாகங்கள் உங்களை நேரடியாகத் தேடிவந்து நாகமுத்துக்களைக் கக்கிக் கொடுத்துவிட்டுச் செல்லும் என்றுத் தெரிவித்தனர்.
மேலும், அவர்கள் எங்களுக்கு சில நாகக் கற்களை கொடுத்து அதனை வீட்டில் வைத்தால் செல்வம், ஐஸ்வர்யம் பெருகும் என்றார்கள். அதனை உண்மை என்று நம்பி, அந்த கற்களை நாங்கள் 7 லட்ச ரூபாய்க் கொடுத்து வாங்கினோம்.
ஆனால், எங்கள் வாழ்வில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படவில்லை. அதன் பின்னர் நாங்கள் அந்தக் நாகக் கற்களை நகைக்கடை ஒன்றில் எடுத்துப்போய் காட்டியபோதுதான் இது நாகமுத்துவே இல்லை சாதாரண முத்து என்றுத் தெரியவந்தது. எங்களைப் போல் பலரும் ஏமாந்துள்ளனர். இது தொடர்பாக உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த புகாரின் படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து, போலி சாமியார்கள் இதேபோல், வேறு யாரையெல்லாம் ஏமாற்றியிருக்கிறார்கள்? என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகின்றனர்.