திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு பள்ளி வகுப்பறையில் இரண்டு மாணவர்கள் மோதிக்கொண்டதில் 9ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஆரணி சுப்பிரமணிய நகர் பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (14) அப்பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் தமிழ்ச்செல்வனுடன் படிக்கும் மாணவர் ஒருவர் தமிழ்ச்செல்வனை கேலி செய்துள்ளார். இதனால் இவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, வகுப்பறைக்குள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர்.
அப்பொழுது திடீரென தமிழ்ச்செல்வன் மயங்கி விழுந்துள்ளான். இதையடுத்து சக மாணவர்கள் இதுகுறித்து தலைமை ஆசிரியரிடம் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வனை மீட்டு சிகிச்சைக்காக ஆரணி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றார். பின்பு அங்கிருந்து தமிழ்ச்செல்வனை மேல் சிகிச்சைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் தமிழ்ச்செல்வன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தமிழ்ச்செல்வனின் பெற்றோர் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தமிழ்ச்செல்வனிடம் மோதலில் ஈடுபட்ட மாணவனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.