கூடலூர்: தேக்கடியில் 15வது மலர் கண்காட்சி நாளை முதல் நடைபெறுகிறது. கேரள மாநிலம், தேக்கடி வேளாண் தோட்டக்கலை சங்கம், குமுளி பஞ்சாயத்து நிர்வாகம், மன்னாரத்தரை கார்டன் இணைந்து நடத்தும் தேக்கடி 15வது மலர் கண்காட்சி தேக்கடி – குமுளி ரோட்டில் கல்லறைக்கல் மைதானத்தில், நாளை முதல் 30 நாட்கள் நடைபெறுகிறது. இந்த மலர் கண்காட்சியில் பல்லாயிரக்கணக்கான மலர்கள், நூற்றுக்கணக்கான மருத்துவ மூலிகைச்செடிகள், அலங்காரச்செடிகள், தோட்டச் செடிகள், சமையலறை தோட்டம் அமைக்க தேவையான செடி, நாற்றுகள் அனைத்தும் பார்வையாளர்களை கவரும் வகையில் இடம் பெறுகிறது.
கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் தாமஸ் கூறுகையில், ‘‘இக்கண்காட்சியில், வேளாண் குறித்த கருத்தரங்கம், விவசாயம் குறித்த சந்தேகங்கள் மற்றும் பார்வையாளர்களுக்கான மலர் அலங்கார போட்டிகள், சமையல் போட்டி, குழந்தைகளுக்காக விளையாட்டரங்கம், கண்காட்சி, வீட்டு வளர்ப்பு விலங்குகளின் கண்காட்சி, இயற்கை காய்கறி, மழைநீர் சேகரிப்பு, பெண்கள் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கு இடம் பெறுகிறது’’ என்றார்.