ரவி தேஜா நடிக்கும் 'டைகர் நாகேஸ்வரராவ்' பட வெளியீட்டு தேதி அறிவிப்பு

‘மாஸ் மகாராஜா’ ரவி தேஜா- இயக்குநர் வம்சி -தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால் ஆகியோரின் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ‘டைகர் நாகேஸ்வரராவ்’ எனும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இயக்குநர் வம்சி இயக்கத்தில் ‘மாஸ் மகாராஜா’ ரவி தேஜா நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘டைகர் நாகேஸ்வரராவ்’. இந்தத் திரைப்படத்தில் ‘மாஸ் மகாராஜா’ ரவி தேஜா உடன் பாலிவுட் நடிகைகள் நூபுர் சனோன் மற்றும் காயத்ரி பரத்வாஜ் இணைந்து நடிக்கிறார்கள். ஆர். மதி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசைமைக்கிறார். ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ , ‘கார்த்திகேயா 2’ ஆகிய பிரம்மாண்டமான வெற்றி படங்களை வழங்கிய அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் பிரபல தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால் தயாரித்திருக்கிறார். ஸ்ரீகாந்த் விசா வசனம் எழுத, அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், மயங்க் சிங்கானியா இணை தயாரிப்பாளராகவும் பணியாற்றுகின்றனர்.

பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படத்திற்காக ஐந்து ஏக்கர் நிலத்தில் ஸ்டுவர்ட்புரம் எனும் கிராமம் பெரும் பட்ஜெட்டில் பிரம்மாண்டமான முறையில் உருவாக்கப்பட்டது. 1970களில் ஸ்டூவர்ட்புரம் எனும் கிராமத்தில் வாழ்ந்த டைகர் நாகேஸ்வரராவ் என்னும் திருடனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி தயாராகும் இந்த திரைப்படத்தில் டைகர் நாகேஸ்வரராவ் எனும் கதாபாத்திரத்தில் ‘மாஸ் மகாராஜா’ ரவிதேஜா வித்யாசமான கெட்டப்பில் நடிக்கிறார்.

தற்போது இந்த திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. ‘டைகர் நாகேஸ்வரராவ்’ எனும் திரைப்படம் நவராத்திரி திருவிழா கொண்டாடும் தருணமான அக்டோபர் 20ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது. இதற்காக வெளியிடப்பட்டிருக்கும் போஸ்டரில் ‘மாஸ் மகாராஜா’ ரவி தேஜா டைகர் நாகேஸ்வரராவின் கெட்டப்பில் நீராவி ரயில் மீது நின்றிருப்பது ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

தசரா விடுமுறையின் போது ‘மாஸ் மகாராஜா’ ரவி தேஜாவின் ‘டைகர் நாகேஸ்வரராவ்’ திரைப்படம் வெளியாவதால் வசூல் ரீதியாக பெரும் வெற்றியை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.