கிருஷ்ணகிரி நகராட்சியில் அதிக திமுக உறுப்பினர்களை சேர்க்கும் வார்டுக்கு ஒரு பவுன் தங்கக் காசு அறிவிப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகராட்சியில் அதிக திமுக உறுப்பினர்களை சேர்க்கும் வார்டுக்கு ஒரு பவுன் தங்கக் காசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரியில் இன்று நகர திமுக கூட்டம் நடந்தது. கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்எல்ஏ கலந்து கொண்டு சிறப்புரையாற்றி புதிய திமுக உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை வழங்கினார். இக்கூட்டத்தில் பேசிய நகர செயலாளர் நவாப், ”கிருஷ்ணகிரி நகராட்சியில் மொத்தமுள்ள 33 வார்டுகளில், 54 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இதில், வார்டுகள் தோறும் 300 பேர் கொண்ட புதிய உறுப்பினர்களை சேர்க்க வார்டு கவுன்சிலர்கள் தலைமையில் வட்ட செயலாளர்கள், பிஎல்ஏ 2 ஆகியோர் இணைந்து பாடுபட வேண்டும்.

கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அதிகமான திமுக உறுப்பினர்களை சேர்க்கும் வார்டுக்கு முதல் பரிசாக ஒரு பவுன் தங்கக் காசு, 2-ம் பரிசாக, 15 ஆயிரம், 3-ம் பரிசாக 10 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். மேலும், நகராட்சியில் வார்டுகள் தோறும் செல்லும் கட்சி நிர்வாகிகள், வார்டு கவுன்சிலர்கள் பொதுமக்கள் குறைகளை கேட்டு உடனுக்குடன் சரி செய்ய வேண்டும்” என்றார். இந்நிகழ்வில், மாவட்ட துணை செயலாளர் சாவித்திரி கடலரசு மூர்த்தி, பொருளாளர் கதிரவன், நகராட்சி தலைவர் பரிதா நவாப், வட்ட செயலாளர்கள், வார்டு கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.