சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி இராமதாஸிடம், தஞ்சாவூர் மாவட்டத்தில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு டெண்டர் வெளியிட்ட நிலையில், விவசாயிகள் கவலை கொள்ள வேண்டாம், பீதியடைய வேண்டாம் என்று தமிழக அரசு விளக்கம் அளித்து இருப்பது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அன்புமணி இராமதாஸ், “சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், இந்த புதிய ஆறு நிலக்கரி சுரங்கங்களுக்கு தமிழக அரசு அனுமதி கொடுக்காது என்று அறிவிக்க வேண்டும்.

விவசாயிகள் கவலை அடைய வேண்டும் என்றால் என்ன அர்த்தம்? உங்களுக்குத் தெரியாமலேயே, தமிழக அரசுக்கு தெரியாமலேயே ஏலம் விடுகிறார்களா?
உங்களுடைய வீட்டை உங்களுக்கு தெரியாமல் ஒருவர் ஏலம் விட்டால், நீங்கள் என்ன செய்வீர்கள்? கொதித்து எழுந்து விட மாட்டீர்கள்! அதே நிலை தான் இன்றும், விவசாயிகளுக்கு தெரியாமல், அங்குள்ள கிராமங்களுக்கு தெரியாமல் அவர்கள் மண்ணையும், வீட்டையும் மத்திய அரசு ஏலம் விட்டுக் கொண்டிருக்கிறது.
நாம் என்ன செய்ய வேண்டும்? கொதித்து எழ வேண்டும். அதுதான் நடக்கனும், நடக்க வேண்டும். ஆனால் அப்படி கொதித்து எழுவதாக ஒன்றும் தெரியவில்லை. அந்த மக்களுக்கு இன்னும் தெரியவில்லை.
மக்கள் பீதி அடைய வேண்டாம், கவலை அடைய வேண்டாம் என்று சொல்வதற்கு பதில், நாங்கள் இந்த ஆறு நிலக்கரி சுரங்கங்களுக்கு அனுமதி கொடுக்க மாட்டோம் என்று அல்லவா முதலமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்திருக்க வேண்டும். அதனைத்தான் அறிவிக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார்.