காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு சிறை தண்டனை வழங்கியதுடன் அவரது எம்.பி. பதவி நீக்கத்தைக் கண்டித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று காங்கிரஸ் கட்சியினர் நாகர்கோவில் பகுதியில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைப் பார்த்த பாஜக நிர்வாகிகள் ‘கட்சி அலுவலகத்தின் முன்பு போராட்டம் நடத்தாதீர்கள். வேறு இடத்துக்கு செல்லுங்கள்’ என்றது தெரிவித்துள்ளனர்.
இதனால் இரு தரப்பினர் இடையேயும் வாக்குவாதம் ஏற்பட்டு சிறிது நேரத்தில் மோதலாக மாறியது. இதில் நான்கு பேர் காயமடைந்தனர். அப்போது பாஜகவினர் காங்கிரஸ் கட்சியின் கொடிகளை எரித்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த நாகர்கோவில் எம்எல்ஏ எம்.ஆர்.காந்தி உள்ளிட்ட பாஜகவினர் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அதன் பின்னர் அங்கிருந்து இரு கட்சியினரும் கலைந்து சென்றனர். இதையடுத்து இந்த மோதல் தொடர்பாக இருதரப்பையும் சேர்ந்த 13 பேர் மீது 8 பிரிவுகளில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.