அதானி குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதித்திருந்தால் மோடியின் முகத்திரை கிழிந்திருக்கும் :திருமாவளவன்..!!

புதுச்சேரியில் உள்ள மத்திய அரசு நிறுவனமான ஜிப்மர் மருத்துவமனையில் 63 வகை உயர் சிகிச்சைக்கு கட்டணம் வசூலிக்கும் சுற்றறிக்கையை திரும்ப பெறக்கோரியும், ஏழை நோயாளிகள் இறக்க நேரிட்டால் அவர்கள் உடலை கொண்டு செல்ல வழக்கத்தில் இருந்த இலவச ஆம்புலன்ஸ் சேவையை மீண்டும் நடைமுறைப்படுத்துவது, தமிழகத்திலிருந்து பிரசவத்துக்கு வரும் பெண்களை திருப்பி அனுப்பாமல் சிகிச்சை அளிக்கக்கோருவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. புதுச்சேரி ஜிப்மர் எதிரே அந்நிர்வாகத்தை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைவர் எம்பி திருமாவளவன், விழுப்புரம் எம்பி ரவிக்குமார், மூன்று மாவட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய எம்பி திருமாவளவன், “ஜிப்மர் மீண்டும் மக்கள் மருத்துவமனையாக தொடர வேண்டும். நாட்டில் பல விமான நிலையங்கள், துறைமுகங்கள் தனியாருக்கு விற்கப்பட்டுள்ளது. என்.எல்.சியை விற்க முயற்சி செய்கின்றனர். இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது தனியார் நிறுவனங்களை அரசுடமை ஆக்கினார். பல தனியார் வங்கிகள் அனைத்தும் தேசிய மயமாக்கப்பட்டது. ஆனால் பிரதமர் மோடி ஆட்சியிலோ, அனைத்து அரசு சொத்துக்களும் தனியாருக்கு தற்போது விற்கப்படுகின்றது. இது தான் காங்கிரசுக்கும் பாஜாகவிற்கும் உள்ள வித்தியாசம். நான் காங்கிரஸ் கட்சிக்கு வக்காலத்து வாங்கவில்லை. இது தான் உண்மை நிலை. இடஒதுக்கீட்டுக்கு எதிராகதான் தனியார்மயத்தை முன்னிறுத்துகின்றனர்.

இடஒதுக்கீடு கோரிக்கைகளை எழுப்பக்கூடாது என்பதற்காகத்தான் மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படுகின்றது. இதன் மூலம் எளிய மக்கள் கல்வி, வேலை பெறக்கூடாது என்ற நிலைப்பாடு தான் சனாதனம் என்று நாங்கள் குறிப்பிடுகின்றோம். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையை கட்டணம் வசூலிக்கும் நிறுவனமாக்கி தனியாருக்கு ஒப்படைக்கும் உள்நோக்கத்துடன்தான் உயர்சிகிச்சைக்கு கட்டண முறையை அறிவித்துள்ளனர். ஏனெனில் அதானியின் சொத்துக்கள் அனைத்தும் மோடியின் சொத்துக்கள். உலக பணக்காரர்களில் மோடி மூன்றாவது இடத்தில் இருக்கின்றார் என்பது தான் அர்த்தம், அதானி குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதித்திருந்தால் மோடியின் முகத்திரை கிழிந்திருக்கும்” என விமர்சித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.