இம்ரான் கான், அவரது மனைவி மற்றும் கட்சி தலைவர்கள் பாகிஸ்தானில் இருந்து வெளியேற தடை

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடந்த 9-ந்தேதி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்தபோது, அவரை துணை ராணுவ படையினர் அதிரடியாக கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது.

லாகூர் படைப்பிரிவு கமாண்டர் அலுவலகம், மியான்வாலி விமானப்படை தளம் மற்றும் பைசலாபாத்தில் உள்ள ஐ.எஸ்.ஐ. கட்டிடம் உட்பட பல ராணுவ தளங்களை இம்ரான் கானின் கட்சியினர் சேதப்படுத்தினர். ராவல்பிண்டியில் உள்ள ராணுவ தலைமையகமும் தாக்கப்பட்டது. வன்முறை மோதலில் 10 பேர் பலியானதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவ நிலைகளை தாக்கியதால் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியை(பி.டி.ஐ.) தடை செய்வது குறித்து பாகிஸ்தான் அரசு பரிசீலனை செய்து வருவதாக பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை மந்திரி கவாஜா ஆசிப் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இம்ரான் கான், அவரது மனைவி புஸ்ரா பீவி மற்றும் இம்ரான் கானின் பி.டி.ஐ. கட்சியைச் சேர்ந்த 80 பேர் பாகிஸ்தானில் இருந்து வெளியேற தடை விதித்து ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.