பிரதிஷ்டை தின சிறப்பு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு

திருவனந்தபுரம்,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு சீசன் தவிர, விசேஷ நாட்கள் மற்றும் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், பிரதிஷ்டை தின சிறப்பு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். 18-ம் படிக்கு கீழ் அமைக்கப்பட்டுள்ள கற்பூர ஆழியில் நெருப்பு மூட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

பிரதிஷ்டை தினமான இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, வழக்கமான பூஜைக்கு பிறகு பிரதிஷ்டை தின சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறுகின்றன. இரவு 10 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும்.

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மீண்டும் அடுத்த மாதம் (ஜூன்) 15-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். 16-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.