தமிழகத்தில் மின் கட்டணம் மீண்டும் உயர்வு? ஒரு யூனிட்டிற்கு இவ்வளவா… நிறுத்தி வைப்பாரா ஸ்டாலின்?

தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்தும் அதிகாரம் TNERC எனப்படும் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் உள்ளது. இதில் ஆணைய தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்களை தமிழக அரசு தான் நியமனம் செய்கிறது. எனவே முதலமைச்சர்

நினைத்தால் மின் கட்டணம் தொடர்பான விஷயங்களில் உரிய முடிவு எடுக்க முடியும். ஏற்கனவே விலைவாசி உயர்வால் தமிழக மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

மின் கட்டணம் குறைக்கப்படுமா? – அமைச்சர் பதில்!

மின் கட்டண உயர்வு

இந்நிலையில் புதிதாக ஒரு கட்டண உயர்வை ஏற்பார்களா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. ஆனால் இதுதொடர்பாக தகவல்கள் காட்டுத்தீ போல பரவி மக்கள் மத்தியில் கலக்கத்தை உண்டாக்கியுள்ளது. விஷயம் இதுதான். வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்கிறது. அதுவும் ஒரு யூனிட்டிற்கு 4.7 சதவீதம் உயர்த்தப்படுமாம்.

மின்சார வாரியம் முடிவு

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு தான் மின் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டது. தமிழ்நாடு மின்சார வாரியம் ஏற்கனவே நிதி நெருக்கடியால் தவித்து வருகிறது. இதனை சமாளிக்க மின் பயன்பாடு மற்றும் புதிய இணைப்பிற்கான கட்டணத்தை உயர்த்த திட்டமிடப்பட்டது.

35 சதவீதம் வரை உயர்வு

இதையொட்டி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் 2022 ஜூலை 18ஆம் தேதி மின்சார வாரியம் விண்ணப்பித்தது. பின்னர் பொதுமக்களிடமும் கருத்து கேட்கப்பட்டது. கடைசியில் 2022 செப்டம்பர் 10ஆம் தேதி முதல் மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. அதுவும் 35 சதவீதம் உயர்த்தி கொள்ள ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி,

வீடுகளில் 400 யூனிட் வரை (1 யூனிட்டிற்கு) – 4.50 ரூபாய்401 – 500 யூனிட் வரை (1 யூனிட்டிற்கு) – 6 ரூபாய்501 – 600 யூனிட் வரை (1 யூனிட்டிற்கு) – 8 ரூபாய்601 – 800 யூனிட் வரை (1 யூனிட்டிற்கு) – 9 ரூபாய்801 – 1,000 யூனிட் வரை (1 யூனிட்டிற்கு) – 10 ரூபாய்1,001 யூனிட்டிற்கு மேல் – 11 ரூபாய்

ஜூலை 1 முதல்

இதேபோல் பெரிய தொழிற்சாலைகள், நிறுவனங்கள், வர்த்தக கடைகள் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளுக்கும் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. இதுதவிர கூடுதலாக ஒரு விஷயத்தையும் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அமல்படுத்தியது. ஆண்டுதோறும் ஜூலை 1ஆம் தேதி முதல் மின் கட்டணத்தை உயர்த்தி கொள்ளலாம்.

திமுக அரசு காப்பாற்றுமா?

இது 2026 – 27ஆம் நிதியாண்டு வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் தான் வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் மீண்டும் ஒருமுறை மின் கட்டணம் உயரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விஷயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு உரிய நடவடிக்கை எடுத்து மின் கட்டண உயர்வை நிறுத்தி வைக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மின் கட்டண உயர்விற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தற்போதே கண்டனம் தெரிவிக்க ஆரம்பித்துவிட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.