அரசுப் பள்ளியில் திமுகவினர் சாராயம் காய்ச்சினார்களா..? ஆர்எஸ்எஸ் பிரமுகரை தூக்கிய போலீஸ்..

கோவை:
அரசுப் பள்ளியில் திமுகவினர் சாராயம் காய்ச்சியதாக பொய் செய்தியை பரப்பிய ஆர்எஸ்எஸ் பிரமுகர் சரவண பிரசாத் (25) என்பவரை கோவை போலீஸார் கைது செய்துள்ளனர்.

விழுப்பும் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து ஏராளமானோர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக கள்ளச்சாராய வியாபாரிகள் 400-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர். காவல்துறை உயரதிகாரிகள் பலர் அதிரடியாக சஸ்பெண்ட்டும், பணியிடமாற்றமும் செய்யப்பட்டனர்.

இருந்தபோதிலும், இந்த விவகாரத்தில் திமுக அரசு மீது பொதுமக்கள் மத்தியில் பரவலாக கடும் அதிருப்தி ஏற்பட்டது. மேலும், சட்டம் – ஒழுங்கு துறையை முதல்வரே கையில் வைத்திருந்த போதும் இதுபோன்ற விஷயங்கள் நடைபெறுவது மக்களை அதிருப்தியில் ஆழ்த்தின.

இது ஒருபுறம் இருக்க, இந்த நிலைமையை பயன்படுத்தி திமுக ஆட்சிக்கு எதிரான மனநிலையை விதைக்கும் எண்ணத்துடன் பல வதந்திகளும் பரப்பப்பட்டு வருவதையும் யாரும் மறுக்க முடியாது. அந்த வகையில், சில வாரங்களுக்கு முன்பு திமுக கரை வேட்டியை கட்டிக்கொண்டிருந்த சிலர் அரசுப் பள்ளி வளாகத்தில் சாராயம் காய்ச்சுவதை போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வேகமாக பரவி வந்தது.

இந்த புகைப்படத்தை வைத்து பலர் முதல்வரையும், திமுக அரசையும் கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்நிலையில், இதுகுறித்து பல்லடம் திமுக அமைப்பினர் போலீஸில் புகார் அளித்தனர். இதன்பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில் இது போலியான புகைப்படம் என்பது தெரியவந்தது. ஃபோட்டா ஷாப் உதவியுடன் போலியாக இந்த புகைப்படம் உருவாக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த புகைப்படத்தை பதிவிட்டவர் யார் என்பது குறித்து சைபர் க்ரைம் துணையுடன் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில், கோவையை சேர்ந்த சரவண பிரசாத் (52) என்ற ஆர்எஸ்எஸ் பிரமுகரே இந்த வேலையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீஸார் அவரை கைது செய்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.