பாகிஸ்தான்: துப்பாக்கி முனையில் 14 வயது சிறுமி கடத்தல்; மதம் மாற்றி, திருமணம் செய்த ஆசிரியர்

கராச்சி,

பாகிஸ்தான் நாட்டின் சிந்த் மாகாணத்தில் வசித்து வருபவர் திலீப் குமார். இவரது மகள் சுஹானா (வயது 14). இந்நிலையில், திலீப் போலீசில் புகார் ஒன்றை அளித்து உள்ளார்.

அதில், அக்தர் கபோல், பைசான் ஜாட் மற்றும் சாரங் கஸ்கேலி ஆகிய 3 பேர் அவரது வீட்டுக்குள் புகுந்து, தங்க நகைகளை கொள்ளையடித்து கொண்டு, அவரது மகள் சுஹானாவை துப்பாக்கி முனையில் கடத்தி சென்று விட்டனர் என தெரிவித்து உள்ளார்.

எனினும், சுஹானா மதம் மாறி, அவரது விருப்பத்தின் பேரிலேயே திருமணம் செய்து கொண்டார் என போலீசார் அவரிடம் கூறியுள்ளனர். இதனால், அவரது மகள் திரும்ப கிடைப்பார் என்ற நம்பிக்கை இல்லை என அவர் கூறுகிறார்.

பாகிஸ்தான் நாட்டில் சிறுபான்மையினராக வசித்து வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்டோரை கடத்தி, கட்டாய மதமாற்றம் செய்து, திருமணம் செய்து கொள்ளும் கலாசாரம் அதிகரித்து காணப்படுகிறது.

ஏறக்குறைய 20 கோடி பேர் வாழும் அந்நாட்டில் இஸ்லாமிய மக்கள் 96 சதவீதம் பேர் உள்ளனர். இந்துக்கள் 2.1 சதவீதமும், கிறிஸ்தவர்க 1.6 சதவீதமும் என்ற அளவிலேயே வசிக்கின்றனர்.

இதுபோன்ற அத்துமீறலில், இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் என வயது வேற்றுமையின்றி ஈடுபட்டபோதும், அந்நாட்டு சட்டங்களும் அவர்களுக்கு துணை போவது போன்றே காணப்படுகின்றன. சட்ட திருத்தம் கொண்டு வர அரசு முயன்றாலும் மதகுருமார்கள் அவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்ட திருத்தம் நிறைவேற விடாமல் தடை போட்டு விடுகின்றனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.