அணியில் அஸ்வின் இடம்பெறாமல் போனதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை- சச்சின் தெண்டுல்கர் விமர்சனம்

புதுடெல்லி

உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்றது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் 2023 இறுதிப் போட்டியில் இந்தியாவின் மோசமான தோல்வி இந்தியா மீது மோசமான விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுனில் கவாஸ்கர் முதல் ரவி சாஸ்திரி வரை, பல முன்னணி கிரிக்கெட் நிபுணர்கள் இந்தியாவின் மோசமான தோல்வி குறித்து தங்கள் கருத்துக்களை கூறி உள்ளனர்.

பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னியும் இந்த தோல்வி குறித்து தனது கருத்துக்களை முன்வைத்துள்ளார். இந்தப் போட்டியில் இந்தியா எங்கு தோற்றது என்பதை கிரிக்கெட் அமைப்பின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முதல் நாளிலேயே இந்தியா ஆட்டம் தோல்வியை நோக்கி சென்றது.இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி வலுவான பார்ட்னர்ஷிப்பை மேற்கொண்டது என கூறினார்.

இது குறித்து சச்சின் தனது டுவிட்டர் பக்கத்தில், “டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையைக் கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணிக்கு வாழ்த்துகள். ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆஸ்திரேலியாவுக்கு சிறப்பான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தார்கள். இந்தியா பேட்டிங்கை தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் அதனைச் செய்யவில்லை.

இருப்பினும் சில நல்ல தருணங்கள் இந்திய அணிக்கு கிடைத்தன. ஆனால், பிளேயிங் 11-ல் டெஸ்ட் போட்டியில் முதன்மை பந்துவீச்சாளாராக இருக்கும் அஸ்வின் இடம்பெறாமல் போனதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. போட்டிக்கு முன்னரே நான் கூறியதுபோல், திறனுள்ள சுழற்பந்து வீச்சாளர்கள் மைதானத்தின் தன்மைக்கேற்ப தங்களது பந்துவீச்சை சிறப்பாக செய்வார்கள். நீங்கள் மறக்கக் கூடாது. ஆஸ்திரேலியாவின் 8 பேட்ஸ்மேன்களில் 5 பேர் இடது கை ஆட்டக்காரர்கள்” என்று பதிவிட்டுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.