மோகன்லாலின் பான் இந்திய படத்தை இயக்கும் கன்னட இயக்குனர்

நடிகர் மோகன்லால் மலையாள திரையுலகம் மட்டுமின்றி தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் விரும்பப்படும் நடிகராக இருக்கிறார். பாலிவுட்டிலும் கூட ஒன்று இரண்டு படங்களில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கு, கன்னட திரை உலகில் நல்ல வாய்ப்புகள் தேடி வரும்போது மறுக்காமல் ஒப்புக்கொண்டு நடித்து வருகிறார். அந்த வகையில் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்கா கபூர் தயாரிக்கும் விருஷபா என்கிற படத்தில் நடிக்கிறார் மோகன்லால்.

ஏக்தா கபூரின் பாலாஜி டெலிபிலிம் நிறுவனம் கனெக்ட் மீடியா மற்றும் ஏவிஎஸ் ஸ்டுடியோஸ் நிறுவனங்களுடன் இணைந்து இந்தப்படத்தை தயாரிக்கிறது. தென்னிந்திய மொழிகள் நான்கிலும் மற்றும் இந்தியிலும் வெளியாகும் விதமாக பான் இந்திய திரைப்படமாக இந்த படம் உருவாக உள்ளது. இப்படி ஒரு படத்தில் மோகன்லால் நடிக்கப் போகிறார் என இரண்டு தினங்களுக்கு முன் யூகமான செய்திகள் வெளியான நிலையில் தற்போது இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல கன்னட இயக்குனர் நந்தா கிஷோர் இந்த படத்தை இயக்குகிறார். இவர் கன்னடத்தில் சுதீப் நடித்த ராணா, உபேந்திரா நடித்த முகுந்தா முராரி உள்ளிட்ட சில படங்களை இயக்கியுள்ளார். கன்னடத்தில் கடைசியாக ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான பொகரு என்கிற படத்தை இயக்கியதும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.