திருப்பூர் மாவட்டம் கருவலூரைச் சேர்ந்தவர் ஜெயபிரியா(32). தனது கணவருடன் சேர்ந்து கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்துவருகிறார். கடந்த சில நாள்களுக்கு முன் ஜெயபிரியாவின் கணவர் வாட்ஸ்அப் எண்ணுக்கு, கார் விற்பனை செய்யப்படுவதாக செய்தி வந்தது. அதில் பல கார்களின் புகைப்படங்களை நபர் ஒருவர் அனுப்பி இருந்தார்.
அந்த எண்ணுக்கு ஜெயபிரியா தொடர்பு கொண்டு பேசுகையில், ரூ.24 லட்சம் செலுத்தினால் சொகுசு கார் விற்பனைக்கு தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார். இதை நம்பி ஜெயபிரியா அந்த நபர் கூறிய வங்கிக் கணக்குக்கு பல தவணைகளாக ரூ.24 லட்சத்தை செலுத்தியுள்ளார். அதன்பிறகு சம்பந்தப்பட்ட நபரை செல்போனில் தொடர்பு கொண்டு காரை வழங்குமாறு கேட்டுள்ளார். ஆனால் அந்த நபர் அழைப்பை எடுக்காமல் இருந்தார். ஒருகட்டத்தில் அந்த நபர் தொடர்பு கொண்ட செல்போன் எண்கள் அனைத்தும் அணைத்து வைக்கப்பட்டது தெரியவந்தது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த, ஜெயபிரியா இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸில் புதன்கிழமை புகார் அளித்தார்.
ஜெயபிரியாவின் கணவருக்கு வந்த வாட்ஸ்அப் எண்ணை வைத்து போலீஸார் நடத்திய விசாரணையில், இந்த மோசடியில் ஈரோடு நேதாஜி ரோடு பகுதியை சேர்ந்த அப்துல் குத்ஜான் (42), ஈரோடு பெரிய அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த தர்வேஷ் (51) ஆகியோர் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இருவரையும் பிடித்து விசாரித்ததில், அப்துல் குத்ஜான் இதேபோன்று கார் விற்பனை செய்வதாக கூறி பலரிடம் ஏமாற்றி வந்தது தெரியவந்தது. தர்வேஷ் தனது வங்கிக் கணக்கை கொடுத்து உதவி செய்துள்ளார். இதையடுத்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.