"ஆட்டம் ஆரம்பம்".. இறுதியானது 'இந்தியா' கூட்டணி.. ஓரணியில் திரண்ட 13 கட்சிகள்.. 'மாஸ்' தீர்மானங்கள்

டெல்லி:
மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவுக்கு எதிராக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இணைந்து உருவாக்கிய ‘இந்தியா’ கூட்டணி சார்பில் இன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன. திமுக, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் என 28 கட்சிகளும் ஓரணியில் திரண்டு 2024 நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்போம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், தங்கள் கூட்டணிக்கான முழக்கத்தையும் அவை அறிவித்துள்ளன.

மத்தியில் பாஜக ஆட்சி அமைந்து 10 ஆண்டுகள் நிறைவேற உள்ள நிலையில், அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த முறையும் பாஜக வெற்றி பெற்று மோடி பிரதமராகும் பட்சத்தில், 3 முறை தொடர்ந்து பிரதமராக இருந்தவர் என்ற ஜவஹர்லால் நேருவின் சாதனையை சமன் செய்துவிடுவார். இதனிடையே, இந்த முறை பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றியே தீருவது என எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளது.

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை ஒன்றிணைந்து இணைப்பது என எதிர்கட்சிகள் முடிவு செய்த போதிலும், யார் பிரதமர் வேட்பாளராக இருப்பது என்ற பிரச்சினையில் எதிர்க்கட்சி கூட்டணி நீர்த்துப் போனது. இதனால் பாஜகவால் எளிதில் வெற்றி பெற முடிந்தது. ஆனால் இந்த முறை பாஜகவுக்கு மீண்டும் அரியணை கிடைத்துவிடக் கூடாது என்பதில் எதிர்க்கட்சிகள் தெளிவாக இருந்தன. இதுவே பாஜகவுக்கு எதிராக ‘இந்தியா’ கூட்டணி அமைய வழிவகுத்தது. மேற்கு வங்கத்தில் மம்தா, தமிழ்நாட்டில் மு.க. ஸ்டாலின், பீகாரில் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் எடுத்த தீவிர முன்னெடுப்பின் காரணமாக 28 எதிர்க்கட்சிகளின் சங்கமமாக ‘இந்தியா’ கூட்டணி உருவானது.

ஏற்கனவே 2 முறை ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் பாட்னா, பெங்களூர் ஆகிய நகரங்களில் பிரம்மாண்ட சந்திப்புகளை நடத்திய நிலையில், இன்று மும்பையில் ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் சந்தித்து பேசினர். 5 மணிநேரங்களுக்கு மேலாக இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்நிலையில், இந்த சந்திப்பில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில் முக்கியமாக, 13 கட்சிகளின் தலைவர்கள் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

காங்கிரஸ் கே.சி. வேணுகோபால், திமுக மு.க. ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் சரத் பவார், சிவசேனா (உத்தவ்) சஞ்சய் ராவத், திரிணமூல் காங்கிரஸ் அபிஷேக் பானர்ஜி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் தேஜஸ்வி யாதவ், ஆம் ஆத்மி ராகவ் சட்டா, சமாஜ்வாதி ஜாவீத் அலி கான், ஐக்கிய ஜனதா தளம் லல்லான் சிங், இந்திய கம்யூனிஸ்ட் டி ராஜா, தேசிய மாநாடு கட்சி ஒமர் அப்துல்லா, பிடிபி கட்சி மெகபூபா முப்தி ஆகிய 13 தலைவர்கள் இந்த ஒருங்கிணைப்புக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

28 கட்சிகளும் இணைந்த ‘இந்தியா’ கூட்டணி ஒன்றிணைந்து 2024 நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்போம்; பல்வேறு மாநிலங்களில் தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டை கூடிய விரைவில் ஒருமனதாக முடிப்போம்; நாடு முழுவதும் ‘இந்தியா’ கூட்டணி சார்பில் பொதுக்கூட்டங்களை நடத்துவோம்; ‘ஒன்றிணையும் பாரதம்.. ஜெயிக்கும் இந்தியா’ என்ற முழுக்கத்தை முன்வைத்து எங்கள் பிரச்சாரங்களை மேற்கொள்வோம் ஆகிய தீர்மானங்கள் இந்த சந்திப்பில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.