கோவாவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் மக்கள் பீதி

பனாஜி,

கோவா மாநிலத்தின் தலைநகர் பனாஜியின் புறநகர் பகுதியான போர்வோரிம் நகரில் சுனாமி அபாயம் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கும் விதமாக அங்குள்ள ஒரு மலையில் முன்னெச்சரிக்கை விடுக்கும் கருவி நிறுவப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இந்த கருவி சுனாமி வருவதை எச்சரிக்கும் அபாய ஒலியை எழுப்பியது. சுமார் 20 நிமிடங்களுக்கு தொடர்ந்து இந்த அபாய ஒலி ஒலித்தது. இதைக்கேட்டு உள்ளூர் மக்கள் கடும் பீதியடைந்தனர்.

எனினும் இது தவறான எச்சரிக்கை, சுனாமி ஏற்படுவதற்கான எந்த அறிகுறிகளும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்பிறகே மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

ஏதேனும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அபாய ஒலி ஒலித்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும், இது குறித்து சம்பந்தப்பட்ட துறையிடம் அறிக்கை கோரியுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.