கார்த்தி நடிப்பில் ராஜு முருகன் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் ஜப்பான்.
இதில் கதாநாயகியாக ‘துப்பறிவாளன்’, ‘நம்மவீட்டு பிள்ளை’ போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடித்திருக்கிறார். கார்த்தியின் 25 வது படமாக உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஜப்பான் வரும் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இன்று இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
அதில் பேசிய நடிகர் கார்த்தி , “ ராஜுமுருகன் சாருடன் படம் பண்ண வேண்டும் என்று ஆசைப்பட்டுதான் முதலில் கதை கேட்டேன். அவருடைய ஹியூமர் சைட் இந்தப் படத்தில் சரியாக அமைந்திருக்கிறது. அவருடைய எழுத்து எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவருடைய `குக்கூ’ படமும் எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. இந்த மாதிரி நல்ல எழுத்தாளர்கள் சினிமாவில் படம் பண்ண வேண்டும். இதற்கு முன்னாடி யாரிடமும் நான் எனக்காக ஒரு கதையை எழுதுங்கள் என்று கேட்டதே கிடையாது. ஆனால் நான் இவரிடம் போய் உரிமையாக எனக்காக கதை எழுதுங்கள் என்று கேட்டேன்.அவருடன் பணியாற்றிய அனுபவம் சிறப்பாக இருந்தது. நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடிந்தது.
ஒரே மாதிரியான படங்களை பண்ணுவதற்குச் சலிப்பாக இருக்கும். அதனால்தான், வேறுவேறு பாணியிலான படங்களில் நடிக்கிறேன். ஒரு ரிக்ஷாகாரரிடம் என் படங்கள் பிடிக்குமா என்று கேட்டதற்கு அவர், “எனக்கு என்ன பிடிக்குனு நெனச்சு நீ படம் எடுக்காத, உனக்கு என்ன பிடிச்சிருகோ அதைப் பண்ணு. அது எனக்கு பிடிக்கும்” என்றார். அதைத்தான் நான் அடிக்கடி நினைத்து பார்த்துக்கொள்வேன். அதைத்தான் நான் இன்றும் பின்பற்றுகிறேன்.
‘மெட்ராஸ்’ படத்தின் அரசியல் குறித்துப் பேசிய கார்த்தி, “நான் மெட்ராஸில் வளர்ந்தவன் எனக்கு சாதியெல்லாம் தெரியாது. அப்படி வளர்ந்தவன் நான். மெட்ராஸில் வளர்ந்தவர்களுக்குச் சாதியெல்லாம் தெரியாது. யாரோடு பழகினாலும் அவர்களுடைய பெயரைக் கேட்போம் அவ்வளவுதான், அதைத்தாண்டி சாதி பற்றியெல்லாம் பேசிக்கொள்ள மாட்டோம்.
‘மெட்ராஸ்’ படத்தில் நான் நடித்தற்கு காரணம், ஒரு சுவரை வைத்து பேசப்பட்ட அரசியல் மற்றும் அதை வைத்து உருவாக்கப்பட்டக் கதை பிடித்திருந்தது, சுவாரஸ்யமாக இருந்தது. அதனால்தான் ‘மெட்ராஸ்’ படத்தில் நடித்தேன். ‘மெட்ராஸ்’ எனக்கு சாதியப் படமாக தெரியவில்லை.
சூர்யாவின் ரோலக்ஸ் பற்றி பேசியவர், “சூர்யா, கமலுக்காகத் தான் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்தார். அதுமட்டுமின்றி, புதிதாக வேறு பரிமாணத்தில் நடிக்க வேண்டும் என்று அவருக்கு ஆசை” என்றார்.