விழுப்புரம்: விழுப்புரம் நகரில் மாடுகளால் வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர். ஆட்சியர் அலுவலக வளாகத்தையும் விட்டு வைக்காமல் மாடுகள் வலம் வருகின்றன. விழுப்புரம் நகரில் உள்ள பிரதான சாலைகள், குடியிருப்பு சாலைகள் என எல்லா இடங்களில் மாடுகள் கூட்டம் கூட்டமாக சாலையின் நடுவே படுத்து கிடப்பதும், சாலையை கடப்பதும் என பொதுமக்களுக்கு தொடர் தொல்லைகள் கொடுத்து வருகின்றன. இதுதொடர்பாக அண்மையில் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த வீடியோவில் ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் கடந்த நவ. 4-ம் தேதி தொடங்கப்பட்ட ‘நடப்போம் நலம் பெறுவோம்’ (Health Walk) என்ற சிறப்பு திட்டத்தை மாடுகளும் செயல்படுத்தி வாக்கிங் செல்லும் வகையில் வரிசையாக நடந்து செல்கின்றன என கிண்டல் செய்து சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில் விழுப்புரம் நகராட்சி நிர்வாகம் சாலைகளில் சுற்றும் மாடுகளை பிடித்து பட்டியில் அடைக்கப்பட்டு, மாடுகளின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்தது. நகராட்சி நிர்வாகத்தால் கடந்தாண்டு பிடிக்கப்பட்ட மாடுகள் அந்தசமயத்தில் பட்டியில் அடைக்கப்பட்டன. ஆனால் மாட்டின் உரிமையாளர் சரியான நேரத்துக்கு வந்து பாலை மட்டும் கறந்து கொண்டு, அபராதம் கட்ட வசதியில்லை. நீங்களே பராமரித்துவாருங்கள் என கூறிவிட்டு செல்ல தொடங்கினர். இதனால் நகராட்சி ஊழியர்களுக்கு பிடிக்கப்படும் மாடுகளை பராமரிப்பது கூடுதல் பணியாகவும் இருந்தது.
மேலும் பிடிக்கப்படும் மாடுகள் ஏலம் விடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கடந்தாண்டு அறிவித்திருந்தார். ஆனால் இந்த மாடுகளை ஏலம் எடுக்க யாரும் முன்வராததால் அந்த அறிவிப்பை மாவட்ட நிர்வாகத்தால் செயல்படுத்த முடியவில்லை. ஆனால் தற்போதும் விழுப்புரம் நகரில் முக்கியமான சாலைகள், வீதிகளில் மாடுகளால் வாகன ஓட்டிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. நடந்து செல்லும் பெண்கள், முதியவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து விழுப்புரம் நகராட்சி அலு வலர்களிடம் கேட்டபோது, “மாட்டின் உரிமை யாளர்கள் அப்பகுதி நகர்மன்ற உறுப்பினருக்கு தெரிந்தவராக உள்ளார். பிடிபட்ட மாட்டை விடுவிக்க சொல்லி நகர்மன்ற உறுப்பினர்கள் எங்களுக்கு அழுத்தம் கொடுக்கின்றனர்.
அப்படியே பிடிபட்ட மாட்டை ஏலம் விடும் நாள் அறிவிக்கப்பட்டாலும் யாரும் ஏலம் எடுக்க முன்வருவதில்லை. இதனால் கடந்த ஆண்டு பிடிக்கப்பட்டு பட்டியில் அடைக்கப்பட்ட மாட்டை வெளியே விட்டு விட்டோம். இப்போது அந்த மாடுகள் சுதந்திரமாக சுற்றிவருகின்றன”என்றனர். கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி சென்னையில் பள்ளிக்கு சென்று வீடு திரும்பிக் கொண் டிருந்த சிறுமி ஆயிஷாவை மாடு முட்டித் தள்ளிய வீடியோ காட்சி தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதே போல கடந்த மாதம் 19-ம் தேதி சென்னை திருல்லிக் கேணியில் மாடு முட்டி தள்ளியதால் படுகாய மடைந்த முதியவர் ஓமந்தூரார் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். விழுப்புரம் நகர சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் மாட்டின் உரிமையாளர்கள் அனைவரையும் அழைத்து கலந்தாய்வு கூட்டம் நடத்தி சுமுக முடிவெடுக்க வேண்டியது அவசியமும், அவசரமும் கூட. நகராட்சி நிர்வாகம் மாட்டின் உரிமையாளர்கள் அனைவரையும் அழைத்து கலந்தாய்வு கூட்டம் நடத்தி சுமுக முடிவெடுக்க வேண்டியது அவசியமும், அவசரமும் கூட.