கடந்த 2019-ம் ஆண்டு, பிப்ரவரியில் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவராக கே.எஸ்.அழகிரி நியமனம் செய்யப்பட்டார். அவரது பதவிக்காலம் கடந்த ஆண்டு பிப்ரவரியுடன் முடிந்துவிட்டது. இதையடுத்து, அந்தப் பதவியைப் பிடிக்க பலரும் காய் நகர்த்தி வருகிறார்கள். கார்த்தி சிதம்பரம், செல்லகுமார், ரூபி மனோகரன், செல்வப்பெருந்தகை, ஜோதிமணி இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. பதிலுக்கு தனது பதவியை தக்கவைத்துக்கொள்ள ‘ஆடுபுலி ஆட்டம் ஆடி’ ஒவ்வொரு காயாக வீழ்த்தி வருகிறார். இந்நிலையில்தான் தமிழக காங்கிரஸின் மூத்த தலைவர்களுள் ஒருவரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், “தமிழக காங்கிரஸில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. கே.எஸ்.அழகிரி மர்மமாகக் கூட்டம் நடத்துகிறார்” என கொதித்திருந்தது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாத அழகிரி, கடந்த 25-ம் தேதி நெல்லை மாவட்டம், திசையன்விளையில் நெல்லை நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சிப் பாசறை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்றார். அப்போது ‘அழகிரி வரும் போது வெடிகுண்டு வெடிக்கும் என நாங்குநேரி வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் அன்புரோஸ் வாட்ஸ்அப் மூலமாக மிரட்டல் விடுத்திருந்தார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இதேபோல் மகளிரணியைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கறுப்பு சேலை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதை செய்தவர்கள் ரூபி மனோகரனின் ஆதரவாளர்கள். இதில் அழகிரி தரப்பு கடுப்பானது.
இதற்கிடையில்தான் ‘தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருப்பதற்கு கே.எஸ்.அழகிரிக்கு தகுதி இல்லை’ என அந்த கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெடித்திருக்கிறார். இவ்வாறு கடுமையான எதிர்ப்பு கிளம்பி வரும் சூழலில் அழகிரியின் பதவி தப்புமா என்ற கேள்வியை மூத்த பத்திரிகையாளர் ப்ரியனிடம் எழுப்பினோம். “தமிழகத்தில் காங்கிரஸ் தனியாக தேர்தலை சந்திப்பதற்க்கோ, வளர்வதற்கோ வாய்ப்பு இல்லை. தி.மு.க-வை சார்ந்து இருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. அந்த கட்சியுடன் கே.எஸ்.அழகிரி மிகவும் நெருக்கமாக இருக்கிறார். தி.மு.க-வுக்கு ஏற்ற தலைவராக இருக்கிறார். ஏற்கெனவே அவரை மாற்ற வேண்டும் என ஒரு குரூப் முயற்சி மேற்கொண்டது.
ஆனால் அது வெற்றி பெறவில்லை. தற்போது மீண்டும் அவரை மாற்ற வேண்டும் என்ற குரல் முன்பை விட அதிகமாக வழுத்திருக்கிறது. அது வெற்றி பெறுமா என்பதை சொல்ல முடியாது. விரைவில் தேர்தல் வரவுள்ளதால், அதுவரை அழகிரியே இருக்க வேண்டும் என நினைக்க கூடும். அதேநேரத்தில் மாற்றுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. பொறுத்திருந்து பார்க்கலாம்” என்றார்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய அழகிரியின் ஆதரவாளர்களோ, “தலைவர் பதவிக்கு வந்த பிறகுதான் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் தமிழக காங்கிரஸ் கூடுதல் இடங்களில் வெற்றி பெற்றது. எனவே அவரை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. எங்களுக்கு எதிராக யார் காய் நார்த்தினாலும் வெற்றி பெற முடியாது. அவர்களை தலைவர் சோலோவாக டீல் செய்து விடுவார்” என்றனர் சூடாக.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.