மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவான் காங்கிரஸில் இருந்து விலகல்

மும்பை: மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் அசோக் சவான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ளார். அவர் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மகாராஷ்டிராவின் முக்கிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக இருந்தவர் அசோக் சவான். மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் சங்கர் ராவ் சவானின் மகனான இவர், அம்மாநில அமைச்சராகவும், இரண்டு முறை முதல்வராகவும் பதவி வகித்தவர். காங்கிரஸில் செல்வாக்கு மிக்க தலைவரான அவர், காங்கிரஸ் கட்சியில் இருந்து இன்று (திங்கள்கிழமை) விலகி உள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் நானா படோலிக்கு எழுதியுள்ளார்.

சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கும் அசோக் சவான், மகாராஷ்டிர சபாநாயகர் ராகுல் நர்வேகரை சந்தித்து பேசியுள்ளார். இந்தச் சந்திப்பை நர்வேகர் உறுதி செய்துள்ளார். அசோக் சவான் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, அசோக் சவான் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த பாஜக மூத்த தலைவரும், மகாராஷ்டிர துணை முதல்வருமான தேவேந்திர பட்னவிஸ், “எதிர்க்கட்சியைச் சேர்ந்த பலர் பாஜகவில் இணைய விரும்புகின்றனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலர் எங்களோடு தொடர்பில் இருக்கின்றனர். ஏனெனில், அவர்கள் கடும் நெருக்கடியில் இருக்கிறார்கள்” என்றார்.

அசோக் சவானோடு, அவரது ஆதரவு எம்எல்ஏக்களான சுபாஷ் தோட்டி, ஜித்தேஷ் அந்தர்புர்கர், அமர் ராஜூர்கர் ஆகியோரும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் இரண்டு மாதங்களில் மக்களவைத் தேர்தல் வர உள்ள நிலையில், இந்த ஆண்டு அக்டோபருக்குள் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அசோக் சவானின் இந்த விலகல் காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மிலிந்த் தியோரா சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனா கட்சியிலும், பாபா சித்திக்கி, அஜித் பவாரின் கட்சியிலும் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.