போபால்: பாஜகவில் இணையப் போவதாக வெளிவரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, போபாலில் நடந்த காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் காணொலி வாயிலாக கமல்நாத் கலந்துகொண்டார். மத்தியப் பிரதேசத்தில் நடக்க இருக்கிற இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை தொடர்பாக இந்தக் கூட்டம் நடந்தது. கமல்நாத்துடன் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
மத்தியப் பிரதேச மாநில முன்னாள் முதல்வர் கமல்நாத் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணையப் போகிறார் என்ற ஊகங்கள் வேகமாக பரவி வருகின்றன. இந்த நிலையில் காங்கிரஸில் இருந்து விலகும் எண்ணம் அவருக்கு இல்லை என்று மத்தியப் பிரதேச காங்கிரஸ் கட்சியினர் விளக்கம் அளித்து வந்தனர். எனினும், மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் எம்எல்ஏகளின் மனநிலை குறித்து அறிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பன்வர் ஜித்தேந்திர சிங் இன்று காலை மத்தியப் பிரதேசம் சென்றார். அவர் கூறுகையில், : “கமல்நாத் பாஜகவில் இணைப் போகிறார் என்ற ஊகத்தில் உண்மை இல்லை. அவை அனைத்தும் பாஜக ஊடகங்களால் உருவாக்கப்பட்ட வதந்திகள்” என்று தெரிவித்தார்.
மத்தியப் பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் ஜித்து பத்வாரி கூறுகையில், “ஊடகங்களை பாஜக தவறாக பயன்படுத்துகிறது. ஒருவரின் உறுதித் தன்மையை கேள்விக்கு உள்ளாக்குகிறது. நான் கமல்நாத்திடம் பேசினேன். தான் எங்கேயும் போகவில்லை என்றும், காங்கிரஸ் கட்சியில் தொடர்வதாகவும் அவர் கூறினார். ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் சதியின் ஒரு பகுதி என அவர் என்னிடம் தெரிவித்தார். காங்கிரஸ்காரனாவே இருந்தேன்; காங்கிரஸ்காரனாகவே இருப்பேன் என அவர் என்னிடம் கூறினார்” என்று தெரிவித்திருந்தார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், “கமல்நாத் தனது அரசியல் பயணத்தை நேரு – காந்தி காலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் தொடக்கியவர். அப்படிப்பட்டவர் காங்கிரஸ் குடும்பத்தை விட்டு பிரிவார் என்பதை நினைத்து பார்க்க முடியாது. அவர் காங்கிரஸ் கட்சியில் வகிக்காத பதவிகளே இல்லை. நான் கமல்நாத்துடன் தொடர்ந்து பேசிக்கொண்டுதான் இருக்கிறேன். அவர் காங்கிரஸ் கட்சியின் தூண்” என்றார்.
இந்நிலையில்தான், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, மத்தியப் பிரதேசத்தில் நடக்க இருக்கிற இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் கமல்நாத் காணொலி வாயிலாக கலந்துகொண்டார்.
இதனிடையே, சனிக்கிழமை டெல்லி சென்றிருந்த கமல்நாத் அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “அப்படி ஏதாவது இருந்தால் நான் முதலில் உங்களுக்கு தெரிவிக்கிறேன்” என்று கூறியிருந்தார். மூத்த அரசியல்வாதியான கமல்நாத் காந்தி குடும்பத்தின் மூன்று தலைமுறை தலைவர்களுடன் பணியாற்றியுள்ளார். கடந்த 1979-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, கமல்நாத்தை தனது மூன்றாவது மகனாக வர்ணித்தார்.
மாநிலங்களவைப் பதவி வழங்கப்படவில்லை என்று கமல்நாத் அதிருப்தியில் உள்ளதாகவும், கடந்த ஆண்டு இறுதியில் நடந்த மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததால் அவர் மீது ராகுல் காந்தி அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தத் தோல்வியால் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அவர் மாற்றப்பட்டார். மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள 230 தொகுதிகளில் 163 இடங்களில் வென்று பாஜக ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது. காங்கிரஸ் 66 இடங்களை மட்டுமே பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.