சிபிஐ விசாரணை முடிந்தது; கவிதாவுக்கு 9 நாட்கள் நீதிமன்ற காவல்

ஹைதராபாத்: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கே.கவிதாவின் சிபிஐ காவல் முடிவடைந்ததை தொடர்ந்து,அவரை ஏப்ரல் 23-ம் தேதிவரை 9 நாட்களுக்கு நீதிமன்ற காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தெலங்கானா மேலவை உறுப்பினரும், முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர ராவின் மகளுமான கவிதாவை கடந்த மார்ச் 15-ம் தேதி அமலாக்கத் துறையினர் ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் கைது செய்தனர். கவிதாவை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய அமலாக்கத் துறையினர் அவரை 10 நாட்கள் தங்கள் காவலில் எடுத்து விசாரித்தனர்.

இதையடுத்து டெல்லி திஹார் சிறையில் இருந்த கவிதாவிடம் சிபிஐ அதிகாரிகள் கடந்த 6-ம் தேதி விசாரணை நடத்தினர். பிறகு கவிதாவை 3 நாட்கள் தங்கள் காவலில் எடுத்து விசாரித்தனர்.

சிபிஐ காவல் முடிவடைந்ததை தொடர்ந்து கவிதா நேற்று டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் 23-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா உத்தரவிட்டார். இதையடுத்து கவிதா திஹார் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.