கொலம்பியாவில் போராட்டம்: மாணவர்களை அதிரடியாக கைது செய்தது அமெரிக்க அரசு

கொலம்பியா: இஸ்ரேல் – ஹமாஸ் போருக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பிரதான கட்டிடத்தை கைப்பற்றி போராட்டம் நடத்திய மாணவர்களை நியூயார்க் போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

காசாவில் இஸ்ரேல் நடத்திவரும் போரை நிறுத்தக் கோரி அமெரிக்கா முழுவதும் பல்வேறு முக்கிய பல்கலைக்கழகங்களில் கடந்த சில நாட்களாகவே போராட்டம் பரவி வருகிறது. நியூயார்க்கின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தொடங்கிய இந்தப் போராட்டம் பல பல்கலைக்கழகங்களுக்கும் பரவியது.

அமெரிக்காவின் சிகாகோ, பிரான்சிஸ்கோ, நியூயார்க், கலிபோர்னியா உள்ளிட்ட நகரங்களில் உள்ள முக்கிய பல்கலைக்கழகங்களான கொலம்பியா, ஹார்வர்ட், யேல், ஐவி லீக் ஸ்கூல், தெற்கு கலிபோர்னியா, டெக்சாஸ் பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த இரண்டு வாரங்களாக உள்ளிருப்பு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

‘Gaza solidarity encampment’, அதாவது காசாவுக்கு ஆதரவாக கூடாரங்கள் அமைத்துப் போராடுதல் என்ற தலைப்பில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மாணவர்கள் பாலஸ்தீன ஆதரவுக் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக போர் நிறுத்தத்தைக் கொண்டு வர வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

செவ்வாய்க்கிழமை அதிகாலை இந்த போராட்டம் தீவிரமடைந்தது. மாணவர்கள் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பிரதான கட்டிடத்தை கைப்பற்றி காவலர்கள் நுழையாதவாறு தடுப்புகள் ஏற்படுத்தினர். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நிர்வாகத்தின் எச்சரிக்கை மீறி மாணவர்கள் போராட்டம் தொடர்ந்தது. அவர்களின் போராட்டத்தை கலைக்க நியூயார்க் காவல்துறையினர் முயற்சி மேற்கொண்டதை தொடர்ந்து கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பிரதான கட்டிடமான ஹாமில்டன் அரங்கை கைப்பற்றினர். மேலும், அங்கு பறக்கவிடப்பட்டிருந்த அமெரிக்க கொடியை அகற்றி பாலஸ்தீன கொடியை பறக்கவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.

நீண்ட நேரம் தொடர்ந்த இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர நியூயார்க் போலீஸார் முயற்சி எடுத்தனர். அதன்படி, செவ்வாய்க்கிழமை இரவு 9 மணியளவில் ஹாமில்டன் அரங்கின் இரண்டாவது மாடியின் ஜன்னல்களை உடைத்து உள்ளே புகுந்து மாணவர்களை அதிரடியாக கைது செய்தனர். மாணவர்களின் கைகளை கட்டி ஒவ்வொருவராக மாடியில் இருந்து அவர்களை கீழே இறக்கிய காவலர்கள் தங்களின் வாகனங்களில் அழைத்து சென்றனர்.

கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லும்போது பாலஸ்தீனம் குறித்த முழக்கங்களை மாணவர்கள் எழுப்பினர். மாணவர்கள் கைதை அடுத்து, கொலம்பியா பல்கலைக்கழகம் முழுவதும் நியூயார்க் போலீஸார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இதேபோல், நாட்டின் பிற பல்கலைக்கழகங்களிலும் மாணவர்களின் போராட்டத்தை முற்றிலும் முடிவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அமெரிக்க அரசு துரிதப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.