தேசிய அரசியலில் இறங்குகிறார் அகிலேஷ் யாதவ்: உ.பி எதிர்க்கட்சி தலைவராகிறார் சித்தப்பா ஷிவ்பால்

புதுடெல்லி: மக்களவை தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், முழுவீச்சில் தேசிய அரசியலில் இறங்குகிறார். இவர் வகித்த உபி சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் பதவியில் அகிலேஷின் சித்தப்பா ஷிவ்பால்சிங் யாதவ் அமர்கிறார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாகிவிட்டது சமாஜ்வாதி. இக்கட்சிக்கு உபியில் 37 மக்களவை தொகுதிகள் கிடைத்துள்ளன. இதன் வாக்கு சதவிகிதமும் உயர்ந்து 33.59 என்றாகி உள்ளது. இண்டியா கூட்டணியின் முக்கிய உறுப்பினர்களான சமாஜ்வாதியும், காங்கிரஸும் தனிப்பட்ட முறையில் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.

இதற்கு எதிர்பாராத வெற்றியாக காங்கிரஸிற்கும் ஆறு தொகுதிகள் கிடைத்துள்ளன. பாஜக ஆளும் உபியின் சட்டப்பேரவைக்கு எதிர்க்கட்சி தலைவர்களாக உள்ளார் அகிலேஷ் யாதவ். உபியின் மெயின்புரி மாவட்டத்தின் கர்ஹால் தொகுதி எம்எல்ஏவாகவும் அகிலேஷ் உள்ளார். திடீரென தன் முடிவை மாற்றிய அகிலேஷ் யாதவ், மக்களவை தேர்தலிலும் கன்னோஜ் தொகுதியில் போட்டியிட்டார். கன்னோஜின் எம்பியாகி விட்ட அகிலேஷ் யாதவ் இனி, தேசிய அரசியலில் தீவிரம் காட்ட முடிவு செய்துள்ளார். இதனால், அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து, எம்பியாக தொடர உள்ளார்.

தாம் உ.பி., சட்டப்பேரவையில் வகித்த எதிர்க்கட்சி தலைவர் பதவியை தம் சித்தப்பாவான ஷிவ்பால்சிங் யாதவுக்கு வழங்க திட்டமிட்டுள்ளார். சமாஜ்வாதியில் தலைவராக அகிலேஷ் யாதவ் அமர்த்தப்பட்டது முதல் அதிருப்தியாக இருந்தார் சிவ்பால்சிங். இதனையடுத்து, சமாஜ்வாதியிலிருந்து வெளியேறி தனிக்கட்சியும் துவங்கினார். ஒருகட்டத்தில் பாஜகவுக்கு ஆதரவாகவும் செயல்பட்டார் ஷிவ்பால்சிங். பிறகு உபியின் கடந்த சட்டப்பேரவை தேர்தலுக்கு பின் ஷிவ்பாலை சமாதானப்படுத்தி கட்சியில் சேர்த்தார் அகிலேஷ்.

இச்சூழலில், எதிர்க்கட்சி தலைவர் பதவியை ஷிவ்பால் ஏற்காமல் இருக்கவும் வாய்ப்புள்ளது. அப்போது, தம் கட்சியின் மூத்த எம்எல்ஏக்களில் ஒபிசி, தலித் அல்லது முஸ்லிம்களில் ஒருவருக்கு அப்பதவியை அகிலேஷ் அளிப்பார் எனத் தெரிகிறது. சமாஜ்வாதியின் நிறுவனரான அகிலேஷ் யாதவின் தந்தை முலாயம்சிங் யாதவ் உயிருடன் இருந்தவரை அவர் தேசிய அரசியலில் தீவிரம் காட்டி வந்தார். மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் முலாயம் வகித்திருந்தார்.

முலாயம் சிங்குக்கு பின் சமாஜ்வாதிக்காக தேசிய அரசியலில் அகிலேஷ் யாதவ் களம் இறங்குகிறார். ஏற்கெனவே, அகிலேஷ் யாதவின் மற்றொரு ஒன்றுவிட்ட சித்தப்பாவான ராம் கோபால் யாதவ் ஆறாவது முறையாக மாநிலங்களவை எம்பியாக உள்ளார். அகிலேஷ் யாதவின் மனைவியான டிம்பிள் யாதவும் மெயின்புரியின் எம்பியாக மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். இதனால், கணவன்-மனைவி எம்பிக்களாக ஒரே ஜோடியாக நாடாளுமன்றத்தில் அகிலேஷும், டிம்பிளும் இருப்பார்கள்.

இதற்குமுன், இவர்களைப் போல் கணவன் மனைவியாக டாக்டர்.சுப்பராயன் -தாதாபாய் தம்பதிகள் நேருவின் ஆட்சியில் எம்பி தம்பதிகளாக இருந்தனர். ஆனால், இருவரும் ஒரே அவையில் அன்றி, மாநிலங்களவை மற்றும் மக்களவையில் வகித்தது நினைவுகூரத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.