Gautam Gambhir vs Rohit Sharma | பார்டர் -கவாஸ்கர் டிராபி போட்டியில் இந்திய அணியின் மோசமான ஆட்டம் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கிறது. கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர் பிளேயர்கள் மிக மோசமாக ஆடிக் கொண்டிருக்கும் நிலையில், அது குறித்து பயிற்சியாளர் கவுதம் கம்பீர் டிரெஸ்ஸிங் ரூமில் பேசிய பேச்சுகள் அனைத்தும் இப்போது லீக்காகியுள்ளது. இந்த விவகாரம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் கிரிக்கெட் வட்டாரத்தில் மிகப்பெரிய சலசலப்பை உருவாக்கியுள்ளது.
பிரச்சனை என்ன?
இந்திய அணி இப்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் மிக மோசமாக ஆடிக் கொண்டிருக்கிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 4 போட்டிகள் முடிவடைந்துவிட்டன. முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி அடுத்த போட்டியை டிரா செய்ததுடன் கடைசி இரண்டு போட்டிகளில் படுதோல்வியை சந்தித்தது. இதனால் 1-2 என இந்திய அணி பின் தங்கியுள்ளது. கடைசி டெஸ்ட் போட்டியில் வென்றாக வேண்டிய இக்கட்டான நிலையில் இந்திய அணி இருக்கிறது. கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் படுமோசமாக இருக்கிறது. ரிஷப் பந்த் பேட்டிங்கும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. விராட் கோலி பேட்டிங் சீராக இல்லை. இந்த சீனியர் பிளேயர்களின் பேட்டிங்கே இந்திய அணி இந்த சீரிஸில் தோற்பதுக்கு காரணம்.
கவுதம் கம்பீர் ஆவேசம்
கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர் பிளேயர்களின் பேட்டிங் படுமோசமாக இருந்ததால் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கடும் கோபத்தில் இருக்கிறார். ரோகித் இல்லாத முதல் டெஸ்ட் போட்டியில் பும்ரா தலைமையில் இந்திய அணி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஆனால் ரோகித் அணிக்குள் வந்ததும் இந்திய அணி தொடர் தோல்விகளை சந்திக்கிறது. இதனால் எல்லா சீனியர் பிளேயர்களையும் பெயரை குறிப்பிடாமல் பயிற்சியாளர் கம்பீர் எச்சரித்திருக்கிறார். இதற்கு மேல் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது, சரியாக விளையாடாதவர்களுக்கு தேங்க் யூ சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என கூறியுள்ளார்.
டிரெஸ்ஸிங் ரூம் லீக்
இந்த பேச்சு உட்பட கவுதம் கம்பீர் பேசிய பேச்சுகள் அனைத்து இப்போது லீக்காகியிருக்கிறது. அத்துடன் யாரை அணியில் சேர்க்க வேண்டும்? என்ற விவகாரத்திலும் கவுதம் கம்பீர் – ரோகித் சர்மா இடையே முரண்பாடு எழுந்திருக்கிறது. அஸ்வின் நீக்கம், வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷித் ராணா சேர்ப்பு ஆகியதை ரோகித் சர்மா விரும்பவில்லை. அதனால், போட்டிக்கு முன்பும், இடையேயும் கேப்டன் ரோகித் சர்மா டிரெஸ்ஸிங் ரூமில் யாருடனும் பேசுவதில்லையாம். இது அணிக்குள் பெரும் குழப்பத்தையும், நிலையற்ற தன்மையையும் அதிகரித்துவிட்டிருக்கிறது. பிளேயர்களும் தங்களின் பொறுப்புகளை உணர்ந்து விளையாடாமல் இருந்து வருகின்றனர். இது குறித்தும் கம்பீர் பேசியிருக்கிறார். இப்போது இந்த தகவல் எல்லாம் லீக்காகியிருப்பது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் இர்பான் பதான் கூட இந்திய அணியின் டிரெஸ்ஸிங் ரூம் தகவல்களை லீக்காயிருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். போட்டி முடிந்த பிறகு அல்லது அதற்கு முன்பு டிரெஸ்ஸிங் ரூமில் என்ன பேசினாலும் அதனை வெளியில் சொல்லக்கூடாது, டிரெஸ்ஸிங் ரூம் தகவல்கள் அனைத்தும் இந்திய அணிக்கு மேம்பாட்டுக்கானவை என்றும் அவர் கூறியுள்ளார். இந்த அணுகுமுறை மிகவும் மோசமானது எனவும் இர்பான் பதான் விமர்சித்துள்ளார்.