"அதில் ரஹ்மான் சாருக்கு எந்த தயக்கமும் இல்லை!" – 'கருப்பு' பற்றி சாய் அபயங்கர்

தமிழ் சினிமாவின் தற்போதைய மியூசிக் சென்சேஷன் சாய் அபயங்கர்தான். சூர்யாவின் ‘கருப்பு’, அல்லு அர்ஜுனின் ‘ராக்கா’ எனப் பல பெரிய பட்ஜெட் படங்களுக்குத் தற்போது இசையமைத்து வருகிறார் சாய் அபயங்கர்.

இதில், சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்படம் மே 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதுவரை அப்படத்திலிருந்து சாய் அபயங்கர் இசையில் உருவாகியிருக்கும் மூன்று பாடல்கள் வெளியாகி இருக்கின்றன.

சூர்யா - கருப்பு திரைப்படம்
சூர்யா – கருப்பு திரைப்படம்

முதலில் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான்தான் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியிருந்தார். அவர் இப்படத்திலிருந்து விலகிய பிறகு சாய் அபயங்கர் இசையமைப்பாளராகப் படத்திற்கு வந்தார்.

அது தொடர்பாக, ஹாலிவுட் ரிப்போர்டரின் இந்தியப் பதிப்பிற்கு அளித்திருக்கும் பேட்டியில் சாய் அபயங்கர் பகிர்ந்திருக்கிறார்.

அவர், “முதலில் இந்தப் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் சார் ஒப்பந்தமாகி இருந்தார் என்பதே எனக்குத் தெரியாது. திடீரென்று திங்க் மியூசிக் குழுவிலிருந்து எனக்கு வழிகாட்டியாக இருக்கும் சந்தோஷ் தொடர்புகொண்டு சூர்யா சார் படத்திற்கு இசையமைக்கப் போகிறேன் என்றார்கள்.

இந்தச் செய்தியை அவர்கள் சொன்னதும் எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அதன் பிறகுதான் ஆரம்பகால போஸ்டர்களில் ரஹ்மான் சாரின் பெயர் இருந்ததைப் பார்த்தேன்.

என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் தயாரிப்பாளர்களும், சூர்யா சாரும் என்னை விரும்பும்போது, அதைச் சிறப்பாகச் செய்து முடிப்பது என் கடமை. நான் ரஹ்மான் சாரிடம் இது குறித்துப் பேசினேன். அவருக்கு இதில் எந்தத் தயக்கமும் இல்லை.

சாய் அபயங்கர்
சாய் அபயங்கர்

அவர் மற்றவர்களை ஊக்குவிப்பதில் ஒருபோதும் தயங்கியதில்லை. நூறு பிரச்னைகள் இருந்தாலும் அவர் மிகவும் அமைதியாக இருப்பார். அது எனக்குப் பெரிய உத்வேகத்தைத் தருகிறது” என்றவர், ‘பத்து தல’ படத்தில் பணியாற்றிய அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.

அவர், “சிலம்பரசன் நடித்த ‘பத்து தல’ படத்தில் நான் பணியாற்றிய போது, ரஹ்மான் சார் திடீரென அறைக்குள் வந்து நான் உருவாக்கிய இசையைக் கேட்டார். அதைக் கேட்டுவிட்டு, ‘இது சூப்பராக இருக்கிறது’ என்று பாராட்டினார்.

அந்தப் பாராட்டிலிருந்து வெளியே வர எனக்கு ஆறு மாதங்கள் ஆகின. அந்த ஜாம்பவானுடன் பணியாற்றுவேன் என்று நான் கற்பனைகூட செய்து பார்த்ததில்லை. ரஹ்மான் சார் கொடுத்த ஊக்கத்தையும், அந்த நாள்களையும் என்னால் ஒருபோதும் மறக்க முடியாது” என்றார் நெகிழ்ச்சியுடன்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.