"இந்தியர்கள் வேண்டாம்..!" – தைவானில் அரசின் முடிவுக்குக் கிளம்பும் எதிர்ப்பும் எதார்த்த நிலையும்!

தைவானில் நிலவும் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறையைச் சமாளிக்க, இந்தியாவுடன் தைவான் அரசு 2024-ம் ஆண்டு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MOU) மேற்கொண்டது. இதன்படி, முதற்கட்டமாக சுமார் 1,000 இந்தியத் தொழிலாளர்கள் இந்த ஆண்டிலேயே தைவான் செல்ல வாய்ப்புள்ளது. ஆனால், இந்தத் திட்டம் தற்போது அந்நாட்டில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

இந்தத் திட்டத்திற்கு தைவானின் எதிர்க்கட்சியான குவோமின்டாங் (KMT) கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தியத் தொழிலாளர்கள் ஒப்பந்தங்களை மீறி “தலைமறைவாக” (Absconding) வாய்ப்புள்ளதாகவும், இது அந்நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என்றும் அவர்கள் வாதிடுகின்றனர். தைவானில் ஏற்கனவே புலம்பெயர் தொழிலாளர்கள் தலைமறைவாகும் சிக்கல் இருப்பதால், இந்தத் திட்டம் அந்தப் பிரச்சனையைத் தீவிரப்படுத்தும் என்பது எதிர்க்கட்சிகளின் வாதம்.

இந்தியா
இந்தியா

பொதுமக்களிடையேயும் இந்தத் திட்டத்திற்கு எதிராகக் குரல்கள் எழுந்துள்ளன. சுமார் 42,000-க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்ட மனு ஒன்று அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமாகப் பெண்களின் பாதுகாப்பு மற்றும் சமூக ஒழுங்கு குறித்த கவலைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் குற்றப் புள்ளிவிவரங்களைச் சுட்டிக்காட்டிச் சில தரப்பினர் எதிர்ப்புத் தெரிவிப்பது, ஒரு குறிப்பிட்ட நாட்டினரை முன்முடிவுகளுடன் அணுகும் போக்கைக் காட்டுவதாக விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் சில முக்கியமான உண்மைகளையும் நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது என அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர். உலகம் முழுவதும் சுமார் 3.5 கோடி இந்தியர்கள் வசிக்கின்றனர். அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், கனடா போன்ற நாடுகளில் இந்தியர்கள் பெரும் எண்ணிக்கையில் இருந்தாலும், அவர்களால் அந்த நாடுகளின் பாதுகாப்புக்கு எந்தப் பாதிப்பும் ஏற்பட்டதாகத் தரவுகள் இல்லை. தைவானில் ஏற்கனவே சுமார் 6,000 இந்தியர்கள் வசிக்கின்றனர். இது இப்போது வரவிருக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கையை விட ஆறு மடங்கு அதிகம். இதுவரை இந்த இந்தியச் சமூகத்தால் அங்கு எந்த விதமான பாதுகாப்புக் குறைபாடுகளும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தைவான்

தேசிய இன ரீதியிலான விவாதங்களைத் தாண்டி, தைவானின் தொழிலாளர் முறைமையில் உள்ள சிக்கல்களே மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியவை. குறைந்த ஊதியம், நீண்ட நேர வேலை மற்றும் இடைத்தரகர்களின் சுரண்டல் போன்ற பிரச்சனைகளைத் தைவானில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் எதிர்கொள்கின்றனர். இந்தத் துயரங்கள் சரிசெய்யப்படாமல் புதிய தொழிலாளர்களை வரவழைப்பது பிரச்சனையை மேலும் சிக்கலாக்கும் என்றும் சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

தைவான் அரசு தனது தொழில் வளர்ச்சிக்காக இந்தியத் தொழிலாளர்களை வரவேற்கத் தயாராக இருந்தாலும், உள்நாட்டு அரசியல் மற்றும் இன ரீதியிலான தவறான புரிதல்கள் இந்தத் திட்டத்திற்குத் தடையாக உள்ளன. “கொள்கைகளை விமர்சிப்பது நியாயமானது; ஆனால் முன்முடிவுகளின் அடிப்படையில் ஒரு சமூகத்தையே எதிர்ப்பது சரியல்ல” என்பதே நடுநிலையாளர்களின் கருத்தாக உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.