Exam web series: “ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில்…" – வெளிப்படையாகப் பேசிய துஷாரா விஜயன்!

‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கவனிக்கத்தக்க நாயகியாக உயர்ந்த துஷாரா விஜயன், தற்போது தனது அடுத்த மைல்கல்லாக எக்ஸாம் என்ற வெப் சீரீஸ் உலகிற்குள் தடம் பதிக்கிறார். புஷ்கர் – காயத்ரி தயாரிப்பில், இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘எக்ஸாம்’ (Exam) வெப் சீரீஸின் டிரைலர் வெளியீட்டு நிழச்சி சென்னையில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகை துஷாரா விஜயன், “நீண்ட இடைவேளைக்குப் பிறகு உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி.

நடிகை துஷாரா விஜயன்
நடிகை துஷாரா விஜயன்

எனது திரைப்பயணத்தில் அமேசான் பிரைம் தளம் மிகவும் ராசியானது. எனது அறிமுகத் திரைப்படமான ‘சார்பட்டா பரம்பரை’ நேரடியாக ஓடிடி-யில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றது. இப்போது எனது வெப் சீரீஸ் அறிமுகமும் அதே தளத்தில் அமைந்திருப்பது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது.

இந்தத் தொடரில் நான் ஏற்றுள்ள ‘ஜான்சி’ என்ற போலிஸ் கதாபாத்திரம் ஒரு கடினமான கதாபாத்திரம். வெளியே பார்க்க மிகவும் கண்டிப்பானவளாகவும், பலமானவளாகவும் தெரிந்தாலும், அவளுக்குள் ஒரு மென்மையான பக்கம் உண்டு.

ஒரு போலீஸ் அதிகாரியாக நடிக்கும்போது அந்த அதிகாரத் தோரணை இயல்பாக வர வேண்டும். அதே சமயம் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி நடிக்க வேண்டும். இந்தச் சவாலான பாத்திரத்தை இயக்குனர் சற்குணம் மிக அழகாக வடிவமைத்திருந்தார்.

இந்தத் தொடருக்காக நிறைய ஸ்டண்ட் காட்சிகளில் நடித்துள்ளேன். படப்பிடிப்பின் போது நிறைய அடி வாங்கினேன், பல இடங்களில் காயங்களும் ஏற்பட்டன. ஆனால், அந்த வலிகளைத் தாண்டி ஆக்ஷன் காட்சிகளில் நடிப்பதை நான் மிகவும் ரசித்தேன். தினேஷ் மாஸ்டர் ஆக்ஷன் காட்சிகளை மிகச் சிறப்பாகக் கொண்டு வந்திருக்கிறார்.

நடிகை துஷாரா விஜயன்
நடிகை துஷாரா விஜயன்

தொடர்ந்து ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க விருப்பமில்லை. நான் எப்போதும் வெரைட்டியான கதாபாத்திரங்களையே விரும்புகிறேன். ஜான்சி கதாபாத்திரம் ஆரம்பமே ஒரு ‘கிரே ஷேட்’ கொண்டதாகத் தான் இருக்கும். வாழ்க்கை என்பது கருப்பு வெள்ளை மட்டுமல்ல, சாம்பல் நிறமும் கலந்ததுதான். அந்த மாதிரியான கதாபாத்திரங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். துஷாரா என்றாலே சீரியஸான பாத்திரங்களைச் செய்பவர் என்ற பிம்பம் இருக்கிறது. ஆனால், ஒரு கலைஞராகப் நடிப்பிற்குத் தீனி போடும் எந்தப் பாத்திரத்தையும் செய்ய நான் தயார்.

எனது வளர்ச்சிக்குப் பின்னால் இருப்பது என் குடும்பம். நான் ஆறு மாதங்கள் வீட்டில் சும்மா இருந்தாலும், என் பெற்றோர் அடுத்த படம் எப்போது என்று கேட்டு நெருக்கடி கொடுத்ததில்லை. அவர்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை பெரியது. பள்ளி நாட்களில் நான் ஒரு சுட்டிப் பெண்ணாக இருந்தேன், இன்று சினிமா எனக்குப் பிடித்தமான ஒரு இடமாக மாறியிருக்கிறது.” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.