“உக்ரைனில் பணயக் கைதிகளாக இந்திய மாணவர்கள்”- ரஷ்யா பகீர் குற்றச்சாட்டு

புதுடெல்லி,
உக்ரைன் மீது கடந்த 7 நாட்களாக ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது குறித்து ரஷிய அதிபர் புதினிடம், பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார். 

அதிலும் குறிப்பாக உக்ரைனின் கிழக்கு பகுதியில் ரஷிய எல்லைக்கு அருகில் அமைந்திருக்கும் கார்கிவ் நகரில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை வெளியேற்றுவது குறித்து புதினிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்த நிலையில் ரஷிய அதிபர் புதின் தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்தியர்களை பத்திரமாக மீட்பதற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் ரஷியா வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும் அந்த அறிக்கையில், ரஷியாவிற்கு கிடைத்த தகவலின்படி சில மாணவர்களை உக்ரைன் ராணுவம் பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருப்பதுடன் அவர்களை மனித கேடயங்களாக பயன்படுத்தி வருவதாகவும், அவர்களை ரஷிய எல்லைக்கு செல்ல விடாமல் உக்ரைன் ராணுவம் தடுத்து வருவதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை ரஷியா வெளியிட்டுள்ளது. இருப்பினும் இந்திய மாணவர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.