திட்டச்சேரி பேரூராட்சியில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக கவுன்சிலர் ஒருவர் பொறுப்பேற்ற அடுத்த நொடியே திமுகவில் இணைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சியில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 15 வார்டுகளில் சுயேட்சை வேட்பாளர்கள் 8-வார்டுகளையும், திமுக 6 வார்டுகளையும், அதிமுக 1 வார்டையும் கைப்பற்றினர்.
இந்த நிலையில் 15 வார்டுகளை சேர்ந்த வேட்பாளர்களும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்த நிலையில் 14 வது வார்டில் வெற்றி பெற்று பொறுப்பேற்ற அதிமுக கவுன்சிலர் கஸ்தூரி கலியபெருமாள் என்பவர் பொறுப்பேற்றுக்கொண்ட சில மணிநேரங்களிலேயே திமுகவில் இணைந்துள்ளார்.
மேலும், நாளை மன்றத் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக கவுன்சிலர் திமுகவில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.