ராஜஸ்தான் மாநிலத்தின் பிகானேர் மாவட்டத்தில் ஒரு தம்பதியை போலீசார் கடந்த திங்கட்கிழமை (ஜன. 23) அன்று கைதுசெய்துள்ளனர். அவர்களின் 5 மாத குழந்தையை கால்வாயில் தூக்கிவீசியதற்காக அவர்கள் கைதுசெய்யப்பட்ட நிலையில், அவர்கள் அந்த கொலைக்கு கூறிய காரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானின் பிகானேரில் உள்ள சந்தாசர் கிராம அரசு பள்ளியில் உதவியாளராக பண்ணியாற்றி வந்துள்ளார், ஜான்வர்லால். அரசு பள்ளியில் ஒப்பந்ததின் அடிப்படையில் பணியாற்றி வந்த இவர், தனது பணி நிரந்தரமாவதற்காக காத்திருந்துள்ளார். ஜான்வர்லால் மற்றும் அவரது மனைவி கீதா தேவி ஆகியோருக்கு ஏற்கெனவே, இரண்டு குழந்தைகள் இருந்துள்ளன. அவர்களுக்கு மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிகிறது.
ஒப்பந்ததில் மாநில அரசின் விதிமுறையின்படி, பணியாளர் இரண்டு குழந்தைகள்தான் பெற்றுக்கொள்ள வேண்டும். மூன்றாவது குழந்தை பிறந்தால், அவர்களுக்கு கட்டாய பணி ஓய்வு அளிக்கப்படும். எனவே, தனது வேலையை காப்பாற்றிக்கொள்வதற்காக, வேலை நிரந்தரமாவதற்கு தடையாக இருக்கும் ஜான்வர்லால் மற்றும் அவரது மனைவி 5 மாத குழந்தையை கால்வாயில் வீசி கொலை செய்துள்ளனர். அந்த குழந்தை கால்வாயில் மூழ்கி உயிரிழந்தது.
இச்சம்பவம் குறித்து பிகானேர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், யோகேஷ் யாதவ் தெரிவிக்கையில்,”ஜான்வர்லால் – கீதா தேவி தம்பதி அவர்களது மகளை கொலை செய்ததற்காக ஜன. 23ஆம் தேதி கைதுசெய்யப்பட்டனர். அரசு வேலையை நிரந்தரமாக்குவதற்காக மனைவியுடன் சேர்ந்து, அந்த குற்றவாளி இச்செயலை செய்துள்ளார். ஜான்வர்லால் – கீதா தேவி ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டம் 302, 120பி ஆகிய பிரிவுகளின்கீழ் சத்தர்கர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.