மும்பை: இந்திய பங்குச்சந்தைகளில் நேற்று சரிவு ஏற்பட்டது. வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 774 புள்ளிகள் சரிந்து 60,205 ஆகவும், தேசிய பங்குச்சந்தைக் குறியீடு நிப்டி 226 புள்ளிகள் சரிந்து 17,892 ஆகவும் இருந்தது. நேற்றைய பங்குச்சந்தையில் அதானி குழும பங்குகள்தான் கடும் சரிவை சந்தித்தன. ஹிண்டன்பர்க் என்ற ஆய்வு நிறுவனம், அதானி மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தது.
இந்த நிறுவனம் கடந்த 2 ஆண்டுகளாகமேற்கொண்ட ஆய்வில், அதானி குழும நிறுவனர் மற்றும் தலைவர் கவுதம் அதானியின் சொத்து கடந்த 3 ஆண்டுகளில் இந்திய மதிப்பில் ₹8,20,000 கோடிக்கு மேல் உயர்ந்துள்ளது.
இந்தக் குழுமத்தின் 7 முக்கிய நிறுவனங்களின் பங்குகள் சராசரியாக 819 சதவீதம் உயர்ந்துள்ளது. அதானி குழுமம் முறைகேடான முறையில் பங்குகளின் விலையை செயற்கையாக அதிகரிக்கச் செய்திருப்பது தெரிய வந்தது என தெரிவித்துள்ளது. இந்த தகவலை அடுத்து, நேற்றைய பங்குச்சந்தையில் அதானி குழும பங்குகளின் மதிப்பு ₹46,000 கோடி சரிந்தது.