ஓட்டுநர் ஷர்மிளா: “அடக்கி வைக்கப்பட்ட பெண்கள் தரணி ஆளவருகையில்…" – புதிய கார் வழங்கிய கமல்ஹாசன்

கோயம்புத்தூர் மாவட்டத்தின் முதல் பெண் தனியார் பேருந்து ஓட்டுநராக பணி செய்து வந்தவர் ஷர்மிளா. இவர் பணிக்கு சேர்ந்தது முதல் சமூக வலைதளங்களில் பலரால் பாராட்டப்பட்டார். பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், தி.மு.க எம்.பி கனிமொழி உள்ளிட்ட பலர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் எம்.பி கனிமொழியின் சந்திப்புக்குப் பிறகு ஷர்மிளா அவர் பணியாற்றி வந்த தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் பணியிலிருந்து விலகிய சம்பவம், பேசுபொருளானது.

ஷர்மிளா

மேலும், இரு தரப்பினரும் பரஸ்பர குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இந்த நிலையில், மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், ஷர்மிளாவுக்கு காரை பரிசளித்திருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் முதல் பெண் ஓட்டுநர் வசந்தகுமாரி, முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வீரலட்சுமி போல கோயம்புத்தூரில் முதன்முறையாக தனியார் பேருந்து ஓட்டுநராக இருந்தவர் ஷர்மிளா.

பேருந்து ஓட்டுநராக வரவேண்டுமெனும் தன்னுடைய கனவிற்காக உழைத்து, சவாலான பணியை திறம்படச் செய்து வந்தார். அதற்காகப் பல்வேறு தரப்பின் பாராட்டுதல்களைப் பெற்றுள்ளார். தன் வயதையொத்த பெண்களுக்குச் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்ந்த ஷர்மிளா குறித்த சமீபத்தைய விவாதம் என் கவனத்திற்கு வந்தது. மிகுந்த வேதனை அடைந்தேன். ஷர்மிளா ஓர் ஓட்டுநராக மட்டுமே இருந்துவிட வேண்டியவர் அல்ல. பல்லாயிரம் ஷர்மிளாக்களை உருவாக்க வேண்டியவரென்பதே என் நம்பிக்கை.

கமல்ஹாசன் – ஷர்மிளா

கமல் பண்பாட்டு மையம் தனது பங்களிப்பாக ஒரு புதிய காரை ஷர்மிளாவிற்கு வழங்குகிறது. வாடகைக் கார் ஓட்டும் தொழில்முனைவராக தனது பயணத்தை ஷர்மிளா மீண்டும் தொடரவிருக்கிறார். ஆண்டாண்டு காலமாய் அடக்கி வைக்கப்பட்ட பெண்கள் தங்கள் தடைகளை உடைத்து தரணி ஆளவருகையில், ஒரு பண்பட்ட சமூகமாக நாம் அவர்களின் பக்கம் நிற்க வேண்டும் என்று விரும்புகிறேன். மகள் ஷர்மிளாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.