திருச்சி: திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகம் (என்ஐடி), பெங்களூரு ஐ-ஸ்டெம் நிறுவனம் சார்பில், தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு ‘சமவேஷா 2024 ’என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் என்ஐடி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
இதில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசியது: வளர்ந்த நாடுகளை காட்டிலும் இந்தியா தன்னுடைய விண்வெளித் திட்டங்களில் குறைந்த பொருட்செலவில் பல சாதனைகளை படைத்துள்ளது. அடுத்து நிலவில் இந்தியா சோதனைக் கூடம் நிறுவ உள்ளது.
சந்திரயான் திட்டங்களில், குறிப்பாக நிலவில் உள்ள மண் பற்றிய ஆராய்ச்சியில், திருச்சி என்ஐடி பேராசிரியர்களின் பங்களிப்பு, வெற்றிக்கு அடிப்படை காரணியாக இருந்தது. சுகாதாரம், மருத்துவம், விவசாயம், விண்வெளி ஆகிய துறைகளில் கல்வி நிறுவனங்கள், விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் கூட்டு ஆராய்ச்சி தேவை. இவ்வாறு அவர் பேசினார்.
ஐ-ஸ்டெம் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஹரிலால் பாஸ்கர், திருச்சி என்ஐடி அதிநவீன இயந்திரங்கள் மற்றும் கருவிகள் சேவை அமைப்பின் தலைமைஅலுவலர் எம்.உமாபதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.