காஞ்சி/செங்கை/திருவள்ளூர்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக, ஏரிகளில் நீர்வரத்து அதிகரித்தபடி உள்ளது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 4,500 கன அடி உபரிநீரும், பூண்டி ஏரியில் இருந்து விநாடிக்கு 16,500 கன அடி உபரநீரும் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிகளில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர் மட்டம் 24 அடியாக உயர்ந்தது. ஏரியின் மொத்த கொள்ளளவு 3,453 மில்லியன் கன அடி என்ற நிலையில் ஏரிக்கு விநாடிக்கு 6,498 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. ஏரி முழு கொள்ளவை எட்டும் நிலையில் இருந்ததால் முதல் கட்டமாக 1,000 கன அடி உபரி நீர் காலையில் திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த நீர் திறப்பின் அளவு 4,500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அடையாறு ஆற்றங்கரையோரம் வசிக்கக்கூடிய மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. இந்த ஏரியில் 5 கண் மதகில் 2 மற்றும் 4 ஆகிய 2 செட்டர்கள் திறக்கப்பட்டு அதன் வழியாக தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பொதுமக்கள் யாரும் உள்ளே வராத வகையில் ஏரிக்குச் செல்லும் அனைத்து வாயில்களும் பூட்டப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

உடன் அமைச்சர் தா.மோ.அன்பரசன், ஆட்சியர் கலைச்செல்வி.
துணை முதல்வர் ஆய்வு: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறந்து விடப்பட்டதைத் தொடர்ந்து தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செம்பரம்பாக்கம் ஏரியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஏரியின் நிலவரம், வெளியேற்றப்படும் நீரின் அளவு ஆகியவற்றை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது அமைச்சர் தா.மோ.அன்பரசன், காஞ்சிபுரம் ஆட்சியர் கலைச்செல்வி மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.சென்னைக்கு குடிநீர் தரும் முக்கிய ஏரிகளில் ஒன்றான புழல் ஏரி 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவும், 21.20 அடி உயரமும் கொண்டது.
நேற்று காலை காலை 8 மணி நிலவரப்படி விநாடிக்கு 1,042 கன அடி மழைநீர் வந்து கொண்டிருக்கிறது. புழல் ஏரியில் 2,956 மில்லியன் கன அடி நீர் இருப்பும், 19.72 அடி நீர் மட்டமும் உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று காலை 9 மணியளவில், புழல் ஏரியில் இருந்து, விநாடிக்கு 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. புழல் ஏரி உபரி நீர் கால்வாய் கரையோரம் உள்ள நாரவாரிகுப்பம், வடகரை, கிராண்ட் லைன், புழல், வடபெரும்பாக்கம், மஞ்சம்பாக்கம், கொசப்பூர், மணலி மற்றும் சடையான்குப்பம் பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

24 அடியில் 23.29 அடி நிரம்பியுள்ள நிலையில், உபரி நீர் நேற்று திறக்கப்பட்டது.
படம்: எம்.முத்துகணேஷ்
பூண்டி ஏரியின் பாதுகாப்பு கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஏரியில் நேற்று முன் தினம் மதியம் 1.30 மணி முதல் உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. உபரிநீர் திறப்பின் அளவு, தொடக்கத்தில் விநாடிக்கு 1,000 கன அடி, நேற்று முன் தினம் மாலை 5 மணியளவில் விநாடிக்கு 5,000 கன அடி, நேற்று காலை 6.30 மணியளவில் விநாடிக்கு 12,000 கன அடி, காலை 10.30 மணியளவில், விநாடிக்கு 16,500 கன அடி என்று அதிகரிக்கப்பட்டுள்ளது.
3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு மற்றும் 35 உயரம் கொண்ட பூண்டி ஏரியின் நீர் இருப்பு, 3,204 மில்லியன் கன அடியாகவும், நீர் மட்ட உயரம், 34.99 அடியாகவும் இருந்தது. பூண்டி ஏரியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
பிச்சாட்டூர் அணை: திருவள்ளூர் மாவட்டம்- ஊத்துக்கோட்டையிலிருந்து, சுமார் 16 கிமீ, தொலைவில் உள்ள பிச்சாட்டூர் அணைக்கு, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர்வரத்து அதிகரித்தது. 1.85 சிஎம்சி கொள்ளளவு கொண்ட பிச்சாட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் நேற்று மாலை 4 மணி நிலவரப்படி விநாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக இருந்தது.
அதே நேரத்தில், பிச்சாட்டூர் அணையின் உபரி நீரோடு, ஊத்துக்கோட்டை, பொன்னேரி வட்டங்களில் பெய்த மழைநீரும் ஆரணி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடுகிறது. நேற்று மாலை 5 மணி நிலவரப்படி, விநாடிக்கு 12,000 கன அடி என, ஓடுகிறது. ஆரணி கரையோரம் உள்ள பேரண்டூர், பேரிட்டிவாக்கம், காரணி, புதுவாயல், ஏலியம்பேடு, லட்சுமிபுரம், காட்டூர், ஆண்டார்மடம் உள்ளிட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மூலம் விநாடிக்கு 500 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. | படம்: ம.பிரபு |
காஞ்சி மாவட்டத்தில் மாங்காடு நகராட்சிக்கு உட்பட்ட ஓம்சக்தி நகரில் அனைத்து பகுதிகளிலும் அதிக அளவு மழைநீர் தேங்கியுள்ளது. காஞ்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் நீர்வளத் துறை பராமரிப்பில் உள்ள 489 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. மதுராந்தகம் பகுதியில் மாம்பாக்கம் மற்றும் பாக்கம் பகுதிகளில் உள்ள ஏரிகள் நிரம்பி உபரிநீர் வெளியேறி வருவதால், தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் ரயில்கள் மதுராந்தகம் அருகே 30 கிமீ வேகத்தில் இயக்கப்பட்டன. இதனால் ஒரு மணி நேரம் தாமதமாக ரயில்கள் சென்றடையும் நிலை ஏற்பட்டது.
மதுராந்தகம் அருகே கிளியாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பவுஞ்சூர் மற்றும் தச்சூர் செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலம் முழ்கிய நிலையில், அச்சாலையில் பயணிகளுடன் வந்த தனியார் பேருந்து வெள்ளத்தில் சிக்கியது. அப்பகுதி மக்கள் பயணிகளை கயிறு மூலம் மீட்டனர். விளை நிலங்கள் தண்ணீரில் முழ்கி, விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.