மாஸ்கோ: ஈரான் – இஸ்ரேல் போர் குறித்த முக்கிய தகவல்களை பகிர்ந்து கொள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
ஈரான் – இஸ்ரேல் இடையே போர் நடைபெற்று வரும் சூழலில் புதின், ஜின்பிங் ஆகிய இரு தலைவர்களும் நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினர். இந்தப் பேச்சுவார்த்தை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. இது குறித்து ரஷ்ய வெளியுறவு கொள்கை உதவியாளர் யூரி உஷாகாவ் நேற்று மாஸ்கோவில் கூறுகையில், “ஈரான் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்ள தங்கள் தொடர்புடைய நிறுவனங்களுக்கு உத்தரவுகளை பிறப்பிக்க அதிபர் புதினும் அதிபர் ஜின்பிங்கும் ஒப்புக்கொண்டனர்.
இந்த விஷயத்தில் இரு தலைவர்களும் ஒரே விதமான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். ஐ.நா. சாசனம் மற்றும் சர்வதேச சட்டத்தின் விதிமுறைகளை மீறும் இஸ்ரேலின் நடவடிக்கைகளை கடுமையாக கண்டிக்கின்றனர்” என்றார்.
இஸ்ரேல்-ஈரான் போரை உடனடியாக நிறுத்தவும், ஈரானின் அணுசக்தி பிரச்சினையை தீர்க்க அரசியல் மற்றும் ராஜதந்திர முயற்சிகளை தீவிரப்படுத்தவும் ரஷ்யாவும் ஐக்கிய அரபு அமீரகமும் நேற்று முன்தினம் அழைப்பு விடுத்தன. ஐக்கிய அரபு அமீரக அதிபர் முகமது பின் சயேத் அல் நயானுடன் ரஷ்ய அதிபர் புதின் தொலைபேசியில் பேசியபோது இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டதாக ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவித்தது.