'வலிமை' வந்துதான் காப்பாற்ற வேண்டுமா ?

கொரோனா ஒமிக்ரான் அலை கடந்த வருட டிசம்பர் மாதக் கடைசியில் பரவ ஆரம்பித்தது. அதனால், ஜனவரி முதல் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கினார்கள். அதனால், பல முக்கிய படங்களின் வெளியீடுகள் தள்ளி வைக்கப்பட்டது. தள்ளி வைக்கப்பட்ட படங்களை இந்த மாதக் கடைசியிலிருந்து அடுத்தடுத்து வெளியிட உள்ளார்கள்.

தமிழில் கடந்த ஜனவரி மாதம் வெளிவந்த பத்துக்கும் மேற்பட்ட படங்களில் எந்த ஒரு படமும் வசூல் ரீதியாக லாபத்தைத் தரவில்லை. சிறிய படங்களே வெளிவந்ததால் பல சிங்கிள் தியேட்டர்களை தற்காலிகமாக மூடியே விட்டார்கள்.

இதனிடையே, கடந்த வெள்ளிக்கிழமை விஷால் நடித்த 'வீரமே வாகை சூடும்' உள்ளிட்ட மூன்று படங்கள் தியேட்டர்களில் வெளிவந்தது. இதில் 'வீரமே வாகை சூடும்' படம் தியேட்டர்களுக்கு மக்களை வரவழைக்கும் என வினியோகஸ்தர்களும், ரசிகர்களும் எதிர்பார்த்தார்கள். படத்தின் டீசர், டிரைலர் பரபரப்பாக இருந்ததால் அந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், படம் நீளமாக இருந்து பரபரப்பாக நகராததால் ரசிகர்களைக் கவரவில்லை. அதனால், தியேட்டர்களுக்கு மக்கள் அதிக அளவில் வரவில்லை. படம் மிகக் குறைவான வசூலையே தருவதாக தியேட்டர்காரர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

அவர்களது அடுத்த எதிர்பார்ப்பாக அஜித் நடித்து இந்த மாதம் வெளிவர உள்ள 'வலிமை' படம் மட்டுமே உள்ளது. அதற்கு இன்னும் மூன்று வாரங்கள் இருப்பதால் அதற்குள்ளாக வரும் மற்ற படங்களாவது ஏதோ ஒரு விதத்தில் தங்களைக் காப்பாற்றாதா என்ற ஆதங்கத்தில் இருக்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.