இந்தியாவின் அன்றாட கரோனா பாதிப்பு 67,597: பாசிடிவிட்டி விகிதிம் 5%; ஓய்கிறதா மூன்றாவது அலை?

இந்தியாவில் அன்றாட கரோனா தொற்று 67,597 என்றளவில் உள்ளது. அன்றாட கரோனா பாசிடிவிட்டி விகிதமும் 5% என்றளவில் சரிந்தது. இதனால், மூன்றாவது அலை முடிவுக்கு வந்ததா என்ற பேச்சுக்களும் எழுந்துள்ளது.

கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி இந்தியாவில் முதல் ஒமைக்ரான் தொற்றாளர் கண்டறியப்பட்டார். அதன் பின்னர் வேகமாகப் பரவும் தன்மை கொண்ட இந்த வகை கரோனா வைரஸ் தனது தாக்கத்தைப் படிப்படியாக அதிகரித்தது. இதனால், நாடு முழுவதும் மீண்டும் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் ஊரடங்கு, பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ரத்து போன்ற பல்வேறு நடவடிக்கைகளும் அமலுக்கு வந்தன. அரசாங்கமும் நாட்டில் மூன்றாவது கரோனா அலை ஏற்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவித்தது.
இந்நிலையில், பிப்ரவரி தொடக்கத்தில் இருந்தே அன்றாட கரோனா பாதிப்பு குறையத் தொடங்கியது. கடந்த 24 மணி நேர நிலவரத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 67,597 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

* அன்றாட பாசிடிவிட்டி விகிதம் 5% என்றளவில் உள்ளது.
* கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 67,597 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
* இதுவரை கரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை: 4,23,39,611.
* கடந்த 24 மணி நேரத்தில் 1,80,456 பேர் காரோனாவில் இருந்து குணமடைந்தனர்.
* இதுவரை கரோனா பாதித்து குணமடைந்தோர் எண்ணிக்கை: 4,08,40,658.
* கடந்த 24 மணி நேரத்தில் 1188 பேர் உயிரிழந்தனர்.
* கரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5,04,062.
* இதுவரை நாடு முழுவதும் 169.63 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கரோனா தொற்று குறைந்து வருவதால், உச்ச நீதிமன்றத்தில் அடுத்த வாரம் முதல் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் நேரடியாக வழக்கு விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்றாட பாசிடிவிட்டி (அதாவது 100 பேரில் எத்தனை பேருக்கு தொற்று இருக்கிறது என்ற விகிதம்) விகிதம் 5% என்றளவிற்குக் குறைந்துள்ளதால் கரோனா மூன்றாவது அலை முடிகிறதா என்ற பேச்சுக்கள் எழுந்துள்ளன. உலக சுகாதார வழிகாட்டுதலின்படி, பாசிடிவிட்டி விகிதம் 5% என்றளவில் இருந்தால் கரோனா பரவல் கட்டுக்குள் இருக்கிறது என்று அர்த்தம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.