3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபாரவெற்றி- வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரை "ஒயிட் வாஷ்" செய்தது

ஆமதாபாத்,
இந்தியா- வெஸ்ட்இண்டீஸ் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது.
இதில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. ஆட்டத்தின் தொடக்கத்திலேயே இந்திய அணி முதல் மூன்று விக்கெட்டுகளை இழந்து திணறியது. தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ரோகித் சர்மா 13 ரன்களிலும், ஷிகர் தவன் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மூன்றாவதாக களமிறங்கிய விராட் கோலி, ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். 

இதையடுத்து ஸ்ரேயஸ் அய்யரும், ரிஷப் பண்ட்டும் பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். ரிஷப் பண்ட் 56 ரன்களில் ஆட்டமிழந்தார். நிதானமாக விளையாடிய ஸ்ரேயஸ் அய்யர் 80 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் வந்த வேகத்தில் 6 ரன்னில் வெளியேறினார்.
பின்வரிசையில் வாஷிங்டன் சுந்தர் (38), மற்றும் தீபக் சாகர் (33) ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தினால் இந்திய அணி நல்ல ஸ்கோரை எட்டியது. இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 265 ரன்களை குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ஜேசன் ஹோல்டர் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 
இதையடுத்து 266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்திய அணியின் திறமையான பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாடியது. அந்த அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரன் 34 ரன்கள் எடுத்தார். பந்துவீச்சாளரான ஒடீன் ஸ்மித் அதிகபட்சமாக 36 ரன்களை அதிரடியாக விளையாடி திரட்டினார்.
இறுதியில் அந்த அணி 37.1 ஓவர்களில் 169 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் சிராஜ், பிரசித் கிருஷ்னா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுவதுமாக கைப்பற்றியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.