”சில அரசியல் தலைவர்களின் ஊதுகுழலாக ஃபேஸ்புக், ட்விட்டர் செயல்படுகிறது” – சோனியா காந்தி

தேர்தல் அரசியலில் சமூக வலைதளங்களின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
image
நாடாளுமன்ற படஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன. அந்த வகையில், இன்று நடைபெற்ற மக்களவைக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசினார். அவர் பேசியதாவது:
சமூக வலைதளங்களின் அபரிமிதமான வளர்ச்சி ஒருபுறம் நன்மை பயப்பாக இருந்தாலும், மறுபுறம் அதனால் ஏற்படும் தீமைகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக, அரசியலில் சமூக வலைதளங்கள் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. சில அரசியல் கட்சிகள் மற்றும் அதன் தலைவர்களின் ஊதுகுழலாக ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் செயல்பட்டு வருகின்றன.
குறிப்பாக, ஆளுங்கட்சியான பாஜக தங்கள் சித்தாந்தத்தை பரப்பும் களமாக சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகிறது. இதனால் பொய் செய்திகளாலும், உணர்ச்சியை தூண்டிவிடும் உண்மைக்கு புறம்பான தகவல்களாலும் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை தவறாக வழிநடத்தப்படுகின்றனர். இது ஜனநாயகத்துக்கு மிகவும் ஆபத்தான ஒன்று.
image
அரசியல் கட்சிகளின் மறைமுக விளம்பர நிறுவனங்களாக சமூக வலைதளங்கள் செயல்பட்டு வருகின்றன. அதனால் அவை பெரும் லாபத்தையும் ஈட்டி வருகின்றன. இந்தியா போன்றதொரு பெரிய ஜனநாயக நாட்டின் மாண்புகளுக்கு இது பெரும் கலங்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. எனவே அரசியலிலும், தேர்தல்களிலும் சமூக வலைதளங்கள் ஆதிக்கம் செலுத்தும் போக்கை அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். அதுதான், நமது ஜனநாயகத்தை பாதுகாக்க ஒரே வழி என சோனியா காந்தி பேசினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.