நேரடியாக ஓடிடியில் வெளியாகும் விக்ரம் பிரபுவின் ‘டாணாக்காரன்’

நடிகர் விக்ரம் பிரபுவின் ‘டாணாக்காரன்’ நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது.

வெற்றிமாறனிடம் அசோசியேட் இயக்குநராக பணிபுரிந்த, சூர்யாவின் ‘ஜெய் பீம்’ திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுக்களைக் குவித்த இயக்குநர் ‘தமிழ்’ இயக்கத்தில் ‘டாணாக்காரன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் விக்ரம் பிரபு. காவல்துறை கதைக்களத்தைக் கொண்ட இப்படத்தில் நடிகர் லால், எம்.எஸ் பாஸ்கர் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். அஞ்சலி நாயர் ஹீரோயினாக நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தின், கதைக்களம் 1998 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகம் இதற்கு முன் பல காவல்துறை சார்ந்த திரைப்படங்களைக் கண்டுள்ளது. ஆனால் ’டாணாக்காரன்’ அந்த வகைப் படங்களில் தனித்துவமான, இதுவரை வெள்ளித்திரையில் ரசிகர்கள் பார்த்திராத ஒரு உலகத்தைக் காட்டும் என்று சொல்லப்படுகிறது.

அதேபோல, நடிகர் விக்ரம் பிரபு இதற்கு முன் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் இந்த கதாபாத்திரம் இதுவரை அவர் நடித்த படங்களில் ஒரு மைல்கல்லாக இருக்கும். ’மாயா’, ’மான்ஸ்டர்’, ’மாநகரம்’ உள்ளிட்ட சிறப்பு படைப்புகளை வழங்கிய பொடன்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரிப்பு நிறுவனம் இந்த வருடம் வெளியிடும் முதல் திரைப்படம் இது. எஸ் ஆர் பிரகாஷ் பாபு, எஸ் ஆர் பிரபு, பி கோபிநாத், தங்க பிரபாகரன் ஆர் உள்ளிட்டோர் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். இப்படத்தின் இயக்குநர் தமிழ், இதற்கு முன் தமிழக காவல்துறையில் காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

image

ஏற்கனவே, இப்படத்தின் போஸ்டரும் டீசரும் வரவேற்பைப் பெற்ற நிலையில்  ‘டாணாக்காரன்’ டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வரும் ஏப்ரல் மாதம் வெளியாகிறது என்று படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் விக்ரம் பிரபு கடைசியாக நடித்த ‘புலிக்குத்தி பாண்டி’ நேரடியாக சன் டிவியில் வெளியானது குறிப்பிடத்தக்கது. ‘பாயும் ஒலி நீ எனக்கு’, ‘டைகர்’ உள்ளிட்டப் படங்களிலும் நடித்து வருகிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.