சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையை, தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளை மேற்கொள்ள டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில், அறப்போர் இயக்கம் மற்றும் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கு விசாரணையைத் தொடர்ந்து நடத்த அனுமதியளித்து உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து, எஸ்.பி.வேலுமணி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின் போது, அரசுத் தரப்பில், இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவின்படி நியமிக்கப்பட்டுள்ள விசாரணை அதிகாரி, தனது அறிக்கையை சீலிடப்பட்ட கவரில், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை 3 வாரங்களுக்குள் உயர் நீதிமன்றப் பதிவாளர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.